அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, வழக்கு விசாரணைக்காக இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். நீதிமன்றத்துக்கு நீதிபதியும் குற்றம் சாட்டப்பட்ட நிர்மலாதேவியும் வந்த பிறகு நெடு நேரமாகியும் அரசு சார்பில் வாதாடும் அரசு துணை வழக்கறிஞர் (Assistant Public Prosecutor) மலர்விழி வராததால் விசாரணை தொடங்காமல் நெடுநேரம் தள்ளிப்போனது. என்ன காரணம் என்று விசாரித்தபோது வழக்கறிஞர் மலர்விழியின் தந்தையின் நினைவு நாள் இன்று என்பதால், அதற்காக சாமிகும்பிட்டுவிட்டு வருவதால் தாமதமாக வருவார் என்று கூறினார்கள். அரசு துணை வழக்கறிஞர் மலர்விழி வந்ததும் தொடங்கிய விசாரணை, வாதங்களுக்குப் பிறகு வரும் நவம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.