Skip to main content

மின்சாரம் தாக்கி அரசுப் பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு; முதல்வர் நிதியுதவி அறிவிப்பு!

Published on 16/08/2024 | Edited on 16/08/2024
Nilgiri govt bus driver Prathap incident CM funding announcement!

நீலகிரியில் அரசுப் பேருந்தின் மீது உயர் மின் அழுத்தக் கம்பி உரசியதால் மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பிரதாப் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஓட்டுநர் பிரதாப் குடும்பத்திற்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்து ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், கெங்கரை-1 கிராமத்தில் இன்று (16.08.2024) காலை சுமார் 06.10 மணியளவில் கூட்டாடாவிலிருந்து கோத்தகிரி நோக்கி நான்கு பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. அப்போது இந்த அரசுப் பேருந்து கோவில்மட்டம் என்னும் இடத்தில் வந்துகொண்டிருந்தபோது உயர் மின்அழுத்தக் கம்பி பேருந்தின்மீது உரசியது. இந்த விபத்தில் நான்கு பயணிகள் மற்றும் நடத்துநர் பேருந்துப் படிக்கெட்டின் வழியாக கீழே இறங்கி தப்பித்தனர்.  அதே சமயம் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி அரசுப் பேருந்து ஒட்டுநர் பிரதாப் (வயது 42) என்பவர் உயிரிழந்தார்.

Nilgiri govt bus driver Prathap incident CM funding announcement!

இந்த துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில், உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் பிரதாப்பை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்