Skip to main content

'நம்மாழ்வார் நினைவு பாசுமதி நெல் வயல்வெளி'-அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் திறந்துவைப்பு!

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

 'Nammazhvar Memorial Basmati Paddy Field- Annamalai University Vice Chancellor Participates!

 

புவனகிரி அருகே பின்னலூர் கிராமத்தில் 'வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர்' நிறுவனம் சார்பில் நம்மாழ்வார் நினைவு பாசுமதி நெல் வயல் செயல்விளக்க பண்ணை துவக்க விழா நடைபெற்றது.

 

விழாவுக்கு வீரநாராயண உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் இராம.கதிரேசன் கலந்துகொண்டு நம்மாழ்வார் நினைவு பாசுமதி நெல் வயல்வெளி செயல் விளக்கப் பண்ணையைத் திறந்து வைத்துப் புதிய வேளாண் சுவரொட்டிகளை வெளியிட்டார்.

 

இதனைத்தொடர்ந்து  அவர் அங்குக் கூடியிருந்த விவசாயிகளிடம் பேசுகையில், ''விவசாயிகள் தற்போது இயற்கை வேளாண் முறையில் பயிரிட ஆர்வம் காட்டி வருகிறார்கள் வரவேற்கத்தக்கது.  நெல் வயல்களில் விவசாயிகள் கூட்டுப் பண்ணையம் அமைத்து வேளாண்மை செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும். கூட்டுப்பண்ணை என்றால் நெல் வயலில் கோழி பண்ணை, குட்டையில் மீன் வளர்ப்பதாகும். இதனால் விவசாயத்திற்கு உரம், பூச்சி மருந்துகள் தேவையில்லை. பயிர்கள் நன்கு செழித்து வளரும் பயிர்களில் பூச்சி மற்றும் களை இருக்காது. கூட்டுப்பண்ணையம் அமைத்து விவசாயிகள் பயிர் செய்ய முன்வர வேண்டும் இதற்கான அனைத்து பணிகளையும் நானே முன்னின்று செய்து தருகிறேன்.

 

இதில் முன்னோடியாகச் செயல்படும் விவசாயிகளை ஊக்கப்படுத்தப்படும் கூட்டுப்பண்ணையம் முறையில் விவசாயிகள் தொடர்ந்து பயிர் செய்தால் அதிக செலவு இல்லாமல் இயற்கை வேளாண் முறையில் மகசூலைப் பெறமுடியும்'' எனப் பேசினார்.  இதனை விவசாயிகள் கைதட்டி வரவேற்றனர்.

 

 'Nammazhvar Memorial Basmati Paddy Field- Annamalai University Vice Chancellor Participates!

 

இதனைத் தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக விவசாயிகளுக்கான வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம் முனைவர் ராஜ்பிரவீன், ஊரக வளர்ச்சி மையம் இயக்குனர் பாலமுருகன், தோட்டக்கலைத்துறை பேராசிரியர் பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விவசாயிகள் அதிக மகசூல் பெறுவது குறித்தும், ஒவ்வோரு காலங்களிலும் எப்படி பயிர் செய்வது, விளைந்த பயிர்களைச் சந்தைப்படுத்தும் முறை குறித்தும் தெளிவாக விளக்கிக் கூறினார்கள்.

 

இந்த விழாவில் கலந்துகொண்ட சுற்றுவட்ட விவசாயிகள் இந்த நிகழ்வு பயனுள்ளதாக இருந்தது என்றனர். விழாவில் கலந்துகொண்டு அனைவருக்கும் இயற்கை முறையில் விளைந்த பாசுமதி அரிசி தலா 1 கிலோ வழங்கப்பட்டது.  விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் இயக்குநர் ரங்கநாயகி நன்றி கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.