Skip to main content

பலத்த பாதுகாப்புடன் மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Re-polling in Manipur with tight security

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இத்தகைய சூழலில் இன்னர் மணிப்பூர்  நாடாளுமன்ற  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதன்படி வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவம், வாக்காளர்கள் மிரட்டல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிப்பு உள்ளிட்ட பல்வேறு வன்முறை சம்பவங்கள்  நிகழ்ந்தன. 

Re-polling in Manipur with tight security

இதனையடுத்து 47 வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 11 வாக்குப்பதிவு மையங்களில் ஏற்பட்ட தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் காரணமாக வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்து மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டிருந்தது. மேலும் இன்று (22.04.2024) மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மணிப்பூரின் இன்னர் மணிப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் 11 வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்