'7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதித்து வருவதால், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113 -ஆவது ஜெயந்தி விழா மற்றும் 58 -ஆவது குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவியும், மலர்வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "சாதியப் பாகுபாடுகளைக் கடுமையாக எதிர்த்தவர் முத்துராமலிங்கத் தேவர். இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி சுதந்திர வேட்கையை விதைத்தவர் முத்துராமலிங்கத் தேவர். வாழ்நாளில் 4,000 நாட்களைச் சிறையில் கழித்தவர் அவர்.
மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதித்து வருவதால் 7.5% உள்ஒதுக்கீடுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 7.5% உள்ஒதுக்கீட்டை இந்தாண்டே அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவ உள்ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் சிலர் செய்யும் அரசியல் எடுபடாது. அரசுப் பள்ளி மாணவர்களின் உணர்வுகளை மதித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரோ, எதிர்க்கட்சிகளோ கோரிக்கை வைக்காமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க உள்ளோம்.
தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகளை அதிகளவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி- குண்டாறு திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரப்பிரசாதமாக இருக்கும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அ.தி.மு.க அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. மீனவர் திட்டங்களுக்காக அதிகம் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது அ.தி.மு.க அரசுதான்." இவ்வாறு முதல்வர் கூறினார்.