விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகில் உள்ள ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவரது மகன் பாஸ்கர்(28). இவர், திருமணம் செய்வதற்கு பெண் கிடைக்காமல் தேடி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த வாரம் பாஸ்கர் தனது உறவினர்கள் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த மரியஜோஸ் என்பவரது மகளை திருமணம் செய்வதற்கு இரு தரப்பினரும் பெண் பார்த்து பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளனர்.
இந்தநிலையில், பாஸ்கருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக பெண்ணின் தாயார் செல்லவமேரிக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர் பாஸ்கர் குறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்துவிட்டு பாஸ்கருக்கு குடிப்பழக்கம் உள்ளதை உறுதி செய்ததோடு அதனால் அவருக்கு பெண் தர முடியாது என்றும் மறுத்துள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த பாஸ்கர், நேற்று முன்தினம் நள்ளிரவு பெண்ணின் தாயார் தனியா செல்லும்போது அவரை தாக்கி கத்தியால் குத்தி அவரது காதையும் கிழித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த செல்வமேரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் இருந்த படி செல்வமேரி அளித்த புகாரின் பேரில், கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி விழுப்புரம் மத்திய சிறையில் அடைத்து உள்ளனர்.