7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும், பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை எழிலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.
இந்த உண்ணாவிரதத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியன், அ.மாயவன், க.மீனாட்சிசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், போராட்டம் நடத்தும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று சந்தித்தார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசிய அவர், அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசிடம் பேசுவதாக உறுதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்,
ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கை குறித்து சட்டப்பேரவையில் பேச உள்ளேன். எம்.எல்.ஏ.க்களுக்கு மாமூல் கொடுத்து ஆட்சியை தக்க வைப்பதில் மட்டுமே அதிமுக அரசு தீவிரமாக உள்ளது என அவர் கூறினார்.