
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் பேசிக் கொண்டிருந்த பொழுது கீழே ஒருவர் இதை பேசுங்கள் அதை பேசுங்கள் என அறிவுறுத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆத்திரமடைந்த திண்டுக்கல் சீனிவாசன், ''டேய் மடையா பேசுறத கேளடா மடையா... சொல்றதை கேளுயா. அதை சொல்றதுக்கு தான் நாங்க வந்திருக்கோம். நீங்க அங்க உக்காந்துகிட்டு சிந்திக்கிறதை நாங்க பேச தெரியாதா. அதைதான் சொல்கிறோம் விளக்கெண்ண கேளு. பாதி பாதியா கேட்டா எப்படி. முட்டாப் பயலா இருக்கியே'' என காட்டமானார்.
100 நாள் வேலை திட்டத்தில் 300 ரூபாய் தரவில்லை. ஆறு மாத பணம் தரவில்லை. நான் பேசுவதை கேட்காமல் எங்கேயோ கவனத்தை வைத்துக்கொண்டு நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் எப்படி? அதுக்கு தான் சொல்கிறேன் கவனித்து கேளு இல்லை என்றால் அங்கே போய் உட்காரு. போட்டு வம்பு பண்ணிட்டு இருக்கிறீர்கள். பன்னீர்செல்வமும் டிடிவி தினகரனும் இரட்டை இலையை தோற்கடிப்பதற்காக ராமநாதபுரத்தில் போய் பலாப்பழத்தில் தூக்கிக்கொண்டு போய் நின்றார்கள். அங்கு ஓபிஎஸ் தோல்வியை தழுவினார். டிடிவி தினகரன் தேனியில் போய் நின்று தோற்றார். இவர்கள் இரண்டு பேராலும் கட்சிக்கு கெட்டப் பெயர். கட்சியை குட்டிச்சுவராக்கி இருக்கிறார்கள். எனவே பொதுக்குழுவுக்கு முன்பாக உங்களை நீக்கி இருக்கிறோம். பொதுக்குழுவுக்கு முன்பாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாது. மற்றவர்கள் யாராக இருந்தாலும் வாருங்கள் இருகரம் கூப்பி வரவேற்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லியிருக்கிறார்'' என பேச்சைத் தொடங்கினார்.