Skip to main content

வேளாண் அலுவலர் பணிக்கான நியமன ஆணை வழங்குவதில் அமைச்சர் தலையீடா? ராமதாஸ் கேள்வி 

Published on 13/03/2018 | Edited on 13/03/2018

 

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் முடிவடைந்து 5 மாதங்களாகியும் இன்று வரை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதனால், தேர்வு எழுதியோர் மத்தியில் தேவையற்ற கவலையும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது.

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 206 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை போட்டித்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு மே 3-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அடுத்த 10 நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டன. போட்டித்தேர்வுகளில் பங்கேற்ற 3000 பேரில் இருந்து, ஒரு பணிக்கு இருவர் வீதம் 416 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு கடந்த அக்டோபர் 9 முதல் 12-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் நடத்தப்பட்டன. வழக்கமாக நேர்காணல் முடிவுகளை இரு நாட்களில் வெளியிட்டு, நியமன ஆணைகளை வழங்கி இருக்க முடியும். ஆனால், இந்த விஷயத்தில் தேவையின்றி தாமதம் செய்யப்படுவது ஏன்? எனத் தெரியவில்லை.

உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கான நேர்காணலில் பங்கேற்று வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்த இளைஞர்கள் கடந்த ஜனவரி மாத இறுதியில் வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள், பணி நியமன ஆணை வழங்கும் நடைமுறைகள் தொடங்கி விட்டதாகவும், விரைவில் நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்தனர். ஆனால், அதன் பின்னர் ஒன்றரை மாதங்களாகியும் இவ்விஷயத்தில்  எந்த முன்னேற்றமும் இல்லை. பல்கலைக்கழகத்தின் சார்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணை வேந்தர் முனைவர் இராமசாமி எந்த முறைகேடுகளிலும் ஈடுபடாதவர் என்ற பெயர் பெற்றவர். ஆனால், வேளாண்துறை அமைச்சரும், அவரது உறவினர்களும்  இந்த விவகாரத்தில் தலையிட்டு முறைகேடுகள் செய்ய முயல்வதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கான தேர்வு எழுதி வெற்றி பெற்று, நேர்காணலில் பங்கேற்று முடிவுக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மனதில் இது தான் மிகப்பெரிய சந்தேகத்தை விதைத்துள்ளது. அதுமட்டுமின்றி, 3000 பேர் எழுதிய போட்டித்தேர்வுகளின் முடிவுகளை 10 நாட்களில் வெளியிட்ட வேளாண் பல்கலைக்கழகம், வெறும் 416 பேர் மட்டும் பங்கேற்ற நேர்காணலின் முடிவுகளை 150 நாட்களாகியும் வெளியிடாதது இந்த சந்தேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கான  முடிவுகளை வெளியிட்டு, நியமன ஆணைகளை வழங்குவதன் மூலமாக மட்டுமே இதை போக்க முடியும்.

வேளாண் பல்கலைக்கழகம் நடத்திய உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கான முடிவுகள் வெளியிடப் படாதது வேறு வழிகளிலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. வேளாண் பல்கலைக்கழகத்தைப் போலவே, தமிழக அரசின் வேளாண்துறையில் காலியாக உள்ள 333 உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கு  போட்டித் தேர்வுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் முடிவடைந்து வரும் 19-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நேர்காணல்கள் நடைபெறவுள்ளன. வேளாண் பல்கலைக்கழகம் நடத்திய நேர்காணலில் பங்கேற்ற சுமார் 150 பேர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நேர்காணலுக்கும் தகுதி பெற்றுள்ளனர்.
வேளாண் பல்கலைக்கழகம் முடிவுகளை அறிவித்தால் அதில் வெற்றி பெற்றவர்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நேர்காணலில் பங்கேற்கத் தேவையில்லை. முடிவுகள் தாமதமாகும் பட்சத்தில்   இரு தேர்வுகளிலும் பலர் வெற்றி பெறும் பட்சத்தில், அவர்கள் விட்டுக் கொடுக்கும் பணி தகுதியற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும் வாய்ப்பு உள்ளது. இது மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும். எனவே, கோவை வேளாண் பல்கலைக்கழகம் வரும் 19-ஆம் தேதிக்குள் உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டு, பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்காவிட்டால் கோவை வேளாண் பல்கலைக்கழகம் முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.

சார்ந்த செய்திகள்