Skip to main content

“ஆன்லைனில் விண்ணப்பித்தால் வீட்டுக்கே குடும்ப அட்டை வந்து சேரும்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
Minister Chakrapani says that if you apply online, the ration card will reach your home

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், புதிய திட்டப் பணிகளுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டினார். அதன்பின் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளையும் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் சிறப்பான ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகின்ற 2024-ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பாக, பச்சரிசி 1 கிலோ (மதிப்பு - ரூ. 35.20), சர்க்கரை ஒரு கிலோ (மதிப்பு ரூ. 40.61), கரும்பு ஒன்று (மதிப்பு ரூ. 33.00) என மொத்தம் மதிப்பு ரூ.108.81 மற்றும் ரொக்கம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. ஆக ஒரு பரிசுத் தொகுப்பின் மொத்த மதிப்பு ரூ.1108.81 ஆகும். தமிழகம் முழுவதும், 2,14,30,587 குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் ரூ.2,376.22 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 6,79,414 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.75.33 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் 1004  நியாய விலைக் கடைகளில் 6,46,259 குடும்ப அட்டைதாரர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 19 நியாய விலைக் கடைகளில்  22,572 குடும்ப அட்டைதாரர்கள், மகளிர் சுய உதவிக்குழு 12 நியாய விலைக் கடைகளில் 10,705 குடும்ப அட்டைதாரர்கள் என 1035 நியாய விலைக் கடைகளின் மூலமாக மொத்தம் 6,79,414 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இன்றைய தினம் பொருளூர் ஊராட்சி, மரிச்சிலம்பு ஊராட்சியில் பூணம்பட்டி, புளியம்பட்டி ஊராட்சியில் புளியம்பட்டி, தும்பலப்பட்டி ஊராட்சியில் தும்பலப்பட்டி, தொப்பம்பட்டி ஊராட்சியில் தொப்பம்பட்டி, கீரனூர் பேரூராட்சியில் கீரனூர், மேல்கரைப்பட்டி ஊராட்சி மேல் கரைப்பட்டி, கோரிக்கடவு ஊராட்சியில் கோரிக்கடவு, அக்கரைப்பட்டி ஊராட்சியில் நரிக்கல்பட்டி, மானூர் ஊராட்சியில் மானூர் தாளையூத்து ஊராட்சியில் தாளையூத்து, புஷ்பத்தூர் ஊராட்சி புஷ்பத்தூர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 

பொருளூர் ஊராட்சி, பொருளூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், வெள்ளத்தடுப்பணை, சிமெண்ட் சாலை, வண்ணக்கல், சிறுபாலம் கட்டுதல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய குடும்ப அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பித்தால் வீட்டிற்கு தபாலில் குடும்ப அட்டை வந்து சேரும் வகையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற 30 மாதங்களில் இதுவரை சுமார் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் குடிமைப் பொருட்களை பெறுவதற்காக நீண்ட தூரம் சென்று சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் அவர்கள் குடியிருப்புகளுக்கு அருகிலேயே குடிமைப் பொருட்களை பெற்று பயன்பெறும் வகையில், புதியதாக நியாய விலைக் கடைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.  

நியாய விலைக் கடைகளில் கை ரேகை பதிவு மூலம் பொருட்கள் பெறுவதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க தற்போது கண் கருவிழி பதிவு மூலம் பதிவுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 36,000 நியாய விலைக் கடைகளில் கண்கருவிழி பதிவுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்காக 4 இலட்சம் மெட்ரிக் டன் நெல்லை சேமிக்கும் வகையில் செமி குடோன்கள் கட்டப்பட்டு வருகின்றன. பணிகள் முடிந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. 

முருங்கை விவசாயிகளை மேம்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் முருங்கை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகளின் விளையாட்டுத் திறனை கண்டறிந்து, ஊக்குவிக்கும் வகையில் சட்டமன்ற தொகுதிகள் தோறும் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. தொப்பம்பட்டியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமையவுள்ளது. அதேபோல் கேதையறும்பில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளது” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“விடுபட்ட பெண்களுக்கு தேர்தல் முடிந்த பின்பு உரிமைத்தொகை கொடுக்கப்படும்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 missing women will be entitled after the election says Minister sakkarapani

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான சச்சிதானந்தத்தை ஆதரித்து ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள இரண்டு யூனியன்களிலும் அதுபோல் ஒட்டன்சத்திரம் டவுன் பகுதிகளில் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வாக்கு  சேகரித்து வருகிறார்.

ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளில் உள்ள கருவூல காலனி, சம்சுதீன்காலனி, ஆர்எஸ்பிநகர், கேகே நகர், நாகனம்பட்டி, ஆத்தூர், ஏபிபிநகர், சத்யாநகர், தும்மிச்சம்பட்டிபுதூர், தும்மிச்சம்பட்டி, திருவள்ளுவர் சாலை ,நல்லாக்கவுண்டன் நகர், சாஸ்தா நகர், காந்தி நகர் உள்பட 18 வார்டுகளிலும் வேட்பாளர் சச்சிதானந்தத்துடன் திறந்தவெளி ஜீப்பில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

 missing women will be entitled after the election says Minister sakkarapani

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் நகர செயலாளரும், நகர்மன்ற துணைத்தலைவருமான வெள்ளைச்சாமி, நகர்மன்றத் தலைவர் திருமலைசாமி, பூத் ஒருங்கிணைப்பாளர்களான முன்னாள் நகர்மன்றத்தலைவர் கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கே.பாலு, இளைஞரணி துணைஅமைப்பாளர் பாண்டியராஜன் உள்பட கட்சி பொறுப்பாளர்களும்,கவுன்சிலர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். 

அப்போது அங்கங்கே நூற்றுக்கணக்கான பெண்கள் கும்பம் ஆராத்தி தட்டுடன் வேட்பாளரையும், அமைச்சரையும் வரவேற்றனர். அதோடு மாலை, சால்வைகளை அணிவித்து வாழ்த்தும் தெரிவித்தனர். அப்போது 13வது வார்டான தும்மிச்சம்பட்டி புதூரைச்சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவியான செல்வி தான் தனியார் காலேஜில் படிப்பை முடித்துவிட்டேன். ஆனால் அந்த கல்லூரியில் நான் பீஸ் கட்டாததால் என்னுடைய சான்றிதழை தர மறுக்கிறார்கள். அதனால் நான் வேலைக்கு போகமுடியாமல் தவிக்கிறேன். எனக்கு அமைச்சர் உதவி செய்ய வேண்டும் என்றுகேட்டார்.

 missing women will be entitled after the election says Minister sakkarapani

உடனே அமைச்சர் சக்கரபாணியும் கல்லூரி பீஸ் எவ்வளவு கட்டவேண்டும் என்று கேட்டார். அந்த மாணவி தொகையைச் சொன்னதும்  நானே கட்டிவிடுகிறேன் என்றார். 

அதைக்கேட்டு அந்த மாற்றுத்திறனாளி பெண்ணான செல்வி அமைச்சரை இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் அமைச்சர் சக்கரபாணி அப்பகுதியில் பேசும்போது, "இந்த ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு தமிழக முதல்வர் மூன்று கல்லூரிகளை கொடுத்து இருக்கிறார். அதுபோல் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூர் போகும் வழியில் ஐஏஎஸ்-ஐபிஎஸ்க்கான பயிற்சி மையமும் கட்டப்பட்டு தற்போது செயல்பட்டும் வருகிறது. விருப்பாச்சியில் தொழிற்பயிற்சி நிலையமும் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதுபோல் காவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் நூறு கோடி செலவில் கரூரில் இருந்து காவேரி தண்ணீர் ஒட்டன்சத்திரம் நகர் மற்றும் தொகுதி முழுக்கவே கொண்டு வருவதற்கான பணிகள் தற்போது நடந்து கொண்டு வருகிறது.

கூடிய விரைவில் அந்தபணிகள் நிறைவடையும். அதன்மூலம் தொகுதி மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் அளவுக்கு வழி செய்யப்பட்டுள்ளது. அதுபோல் மகளிர் உரிமைத்தொகையும் தொகுதி முழுவதும் கொடுத்து இருக்கிறோம். இதில் விடுபட்டு போய் இருந்தால் அவர்களுக்கு தேர்தல் முடிந்தபின் முழுமையாக கொடுக்கப்படும். நமது கூட்டணி வேட்பாளரான சச்சிதானந்தம் உள்ளூர்காரர். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரக்கூடியவர். மற்ற கட்சி வேட்பாளர் போல் வெளியூர்காரர் இல்லை. அதனால் உங்கள் வாக்குகளை அரிவாள் சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெரும்பான்மையான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்" என்று கூறினார். 

Next Story

1,400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; இருவர் கைது

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
1,400 kg ration rice smuggling; two arrested

திருச்சியில் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்ற 1,400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில், திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட ரோந்து மற்றும் வாகன சோதனையின்போது, திருச்சி தென்னூர் ரங்கநாதபுரம் ஆபீஸர்ஸ் காலனி அருகே நான்கு சக்கர வாகனத்தில் ரேசன் அரிசி மூட்டைகளை சிலர் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நிகழ்விடம் சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதில், இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு வந்த ரேஷன் அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றி கொண்டிருந்தது தெரியவந்தது. அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் தென்னூர் குத்பிஷா நகரைச்சேர்ந்த ப.அப்துல் சுக்கூர் (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஹ.சதாம் உசேன் (32) என்பதும், ரேஷன் அரிசியை பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும், அந்த வகையில் விற்பனைக்காக அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1,400 கிலோ அரிசி, மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.