Skip to main content

மேட்டூர் அணை உபரி நீர் திட்டம் காவிரி டெல்டாவை அழித்துவிடும் - பி.ஆர்.பாண்டியன்

Published on 28/05/2020 | Edited on 28/05/2020
,



தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியளர்கள் சந்திப்பில் கூறியதாவது, " தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 18 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. சுமார் 50 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. தமிழக உணவு பொருள் தேவையில் சுமார் 40% டெல்டாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 11 மாநகராட்சிகள் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் வாழக்கூடிய 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக இது விளங்குகிறது. காவிரி உரிமைக்காக 50 ஆண்டு காலம் போராடி பெற்ற உரிமையை குழி தோண்டி புதைக்கும் வகையில் தமிழக பொதுப்பணித்துறை மேட்டூர் உபரி நீர் திட்டம் என்ற பேரில் சட்டவிரோதமாக புதிய நீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. மேட்டூர் அணை முதல் கிருஷ்ணராஜ சாகர் வரை கர்நாடகமோ, தமிழகமோ புதிய நீர் பாசனத் திட்டங்களை செயல்படுத்தக் கூடாது. காவிரி சம்பந்தப்பட்ட அனைத்து அணைகளின் நிர்வாகக் கட்டுப்பாடுகள் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் எதுவாக இருந்தாலும் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும்.


கீழ்பாசன விவசாயிகள் கருத்தரியாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்க முடியாது. இதன் மூலம் காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்பை மீறும் வகையில் அவமதிப்பு நடவடிக்கையில் தமிழக அரசே ஈடுபட்டுள்ளது தெரிய வருகிறது. இதன் மூலம் சட்டவிரோதமாக கர்நாடகம் மேகதாட்டு அணை கட்டும் நடவடிக்கைக்கு தமிழக அரசு மறைமுகமாக துணை போகிறதோ? என அஞ்ச தோன்றுகிறது. குடிநீர் திட்டம் என்ற பெயரில் மேட்டூர் அணையிலிருந்து இறவை பாசனம் மூலம் தண்ணீரை எடப்பாடி தொகுதி உட்பட சேலம் மாவட்டத்திற்கு நீரேற்று திட்டம் (பம்பிங் ஸ்கீம்) மூலம் பெரும் பகுதியான நீரை கொண்டு செல்ல உள்ளனர். அதற்கானப் பணிகள் போர்க்கால அடிப்படையில் துவங்கி உள்ளனர். புதிய பாசனப் பரப்பை உருவாக்கி தோட்டப் பயிர்சாகுபடியை தீவிரப்படுத்த உள்ளனர். ஏரி குளங்களை நிரப்பி காவிரி டெல்டாவை முடக்கும் வகையில் பிராந்திய உணர்வோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இப்பணியில் நேரடியாக ஈடுபட்டுள்ளார். 

 

 


இப்பணி நிறைவேற்றப்பட்டால் காவிரி டெல்டா அழிந்து போகும். விவசாயம் பேரழிவை சந்திக்கும்.5 கோடி மக்களின் குடிநீர் பறிபோகும். டெல்டா விவசாயிகள் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து போகும். எனவே டெல்டா விவசாயிகள் நலன் கருதி மேட்டூர் உபரி நீர் திட்டத்தை கைவிட முதலமைச்சர் முன்வர வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் இதனை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் விரைவில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கிறேன். காவிரி டெல்டாவை சேர்ந்த அனைத்து பாராளுமன்ற சட்டமன்ற உப்பினர்கள், அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து காவிரி டெல்டாவை பாதுகாக்க முன்வர வேண்டுகோள் விடுகிறேன். கரோனாவை போல் உணவு பஞ்சத்தை ஏற்படுத்தும் உள்நோக்கத்தோடு வேளாண்மையை அழிப்பதற்கு வெட்டுக்கிளி தாக்குதல் வட மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. அதனை தமிழகத்திற்குள் நுழையாமல் தடுத்து அழிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தென் மாநில முதல்வர்களோடு இணைந்து செயல்பட தமிழக முதலமைச்சர் முன் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்