
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த சுஜித் (41) தனியார் கொரியர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், பணிக்காகப் பயன்படுத்திய வேன் ஒன்றைச் சொந்தமாக வாங்க இணையதளங்களில் பார்த்து வந்துள்ளார். அதில் இணைய தள நிறுவனம் ஒன்றின் மூலம் சாஜின் என்பவர் தன்னிடம் உள்ள வேனை விற்பனை செய்வதாகக் கூறி கோவைக்கு வருமாறு அழைத்துள்ளார். இதை நம்பி வேனை வாங்குவதற்காகக் கடந்த புதன்கிழமை சுஜித் தனது நண்பர்களான சுனில்(53), ராபின் (32), விஜித் (26), ராஜேஸ் (46), ஆகியோருடன் கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதிக்கு வாடகை காரில் வந்தார்.
அப்போது அங்கே ஆட்டோவில் வந்த 3 பேர் சுஜித், மற்றும் சுனில் ஆகிய இருவரை மட்டும் அழைத்துக்கொண்டு வாடகைக் காரில் போடிபாளையம் பகுதிக்கு அழைத்துச் சென்று ஒரு வேனை காண்பித்துள்ளனர். இதையடுத்து மதுக்கரை அருகே உள்ள வாடகை வீட்டுக்கு இருவரையும் அழைத்துச் சென்ற அந்த கும்பல், அங்கிருந்த மேலும் சிலருடன் சேர்ந்து கொண்டு சுஜித் மற்றும் சுனிலை சரமாரியாகத் தாக்கினர். எதற்காகத் தாக்கப் படுகிறோம்..? என அவர்கள் திகைத்து நிற்க, வேன் வாங்க வைத்திருந்த ரூ.3.16 லட்சம் பணத்தை அவர்கள் பறித்துக் கொண்ட போதுதான் கடத்தப்பட்டதின் நோக்கம் தெரிந்திருக்கிறது.

பின்னர் சுனில் வைத்திருந்த ஏ.டி.எம் கார்டை வாங்கிச் சென்று அதிலிருந்து ரூ.45 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த செல்போன்கள், வாட்ச் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு, இருவரையும் ஆடையில்லாமல், நிர்வாணப் புகைப்படம் எடுத்த அந்த கும்பல், இதுகுறித்து வெளியே சொன்னால் புகைப்படங்களை இணைய தளங்களில் பகிர்ந்து விடுவோம் என மிரட்டினர். பின்னர் இருவரையும் கொச்சின் நெடுஞ்சாலையில் இறக்கி விட்டு வாடகை காருடன் தப்பிச் சென்றனர். இதையடுத்து இருவரும் வாடகை ஆட்டோ பிடித்து தனது மற்ற நண்பர்கள் இருந்த இடத்துக்குச் சென்றனர்.
அங்கிருந்து செட்டிபாளையம் காவல் நிலையம் சென்று புகார் அளிக்க, வழக்கை விசாரித்த போலீஸார் மதுக்கரை காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களைத் தேடினர். முதல் கட்ட விசாரணையில் சம்பவத்தில் தொடர்புடைய கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்கிற ஐயப்பன் (35) என்பவரைக் கைது செய்தனர். அவனை வைத்து கேரளாவில் பதுங்கி இருந்த பாலக்காட்டைச் சேர்ந்த சாஜன்(26), அஜித் (19), மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சலீம் (22), அஜ்மல் கான் (29), அன்சார் (30), ராஜேஷ் (29), ஆகியோரை தனிப்படை போலீஸார் கேரளாவில் வைத்து கைது செய்தனர். மேலும் 7 பேரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.