புதுவையில் மாமுல் கேட்டு மிரட்டிய வாலிபர்கள் கைது
புதுச்சேரி சேதராப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இருசப்பன். இவர் தனியார் செக்யூரிட்டியும், தட்டாஞ்சாவடி வி.வி.பி.நகரில் பியூட்டி பார்லரும் நடத்தி வருகிறார். பியூட்டி பார்லரை அவரது மகன் சுரேந்தர் (29) கவனித்து வந்தார். 28-ந் தேதி பியூட்டி பார்லருக்கு 5 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் சுரேந்தரை கத்தியை காட்டி தங்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் மாமுல் தரவேண்டும் என்று மிரட்டினர் .இதில் பயந்துபோன சுரேந்தர் 13 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சுரேந்தர் கோரிமேடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பணம் கேட்டு மிரட்டிய குண்டுபாளையத்தை சேர்ந்த மணி (22), முத்திரையர் பாளையத்தை சேர்ந்த முனுசாமி (24) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 ஆயிரம் பணமும், 1 கத்தி, 1 பைக்கும் பறிமுதல் செய்தனர். மேலும் எல்லைபிள்ளை சாவடி அருள், கல்மேடுபட்டு வெங்கடேஷ், ஞானசேகர் நகர் பிரசாந்து ஆகியோரை தேடி வருகின்றனர்.
- சுந்தரபாண்டியன்