Skip to main content

பாலாற்றில் தொடர்ந்து கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகள்; விஷமாகும் நீர்நிலை!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Medical waste and garbage are regularly dumped in dairy

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட ஜாப்ராபாத் ஊராட்சியில் பாலாறு செல்கிறது .இந்த பாலாற்றில் கடந்த சில மாதங்களாக வெள்ள நீர் சென்று வந்த நிலையில் பின்னர் மழைப்பொழிவு இல்லாமலும் கோடை வெயில் காரணமாகவும் பாலாறு தற்போது தண்ணீர் வற்றி வறண்டு கிடக்கிறது.

இந்த நிலையில், ஜாப்ராபாத் ஊராட்சியில் சேகரிக்கப்பட்டு வரும் குப்பைகளைப் பல ஆண்டுகளாக ஊராட்சி வாகனங்களில் கொண்டு வந்து பாலாற்றில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. மேலும், இறைச்சிக் கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இதனால் பாலாறு முற்றிலும் மாசடைந்து காணப்படுகிறது. மேலும், துர்நாற்றம் வீசுவதால் அங்கு வசிக்கும் பல்வேறு நோய் தொற்றுகள் பரவும் அபாயம் எழுந்துள்ளது.

மேலும், சுற்றியுள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தும் மருத்துவ கழிவுகள் நேரடியாக பாலாற்றில் கொட்டப்படுகிறது. இங்கு ஆடு, மாடுகள் என்ன கால்நடைகள் பிளாஸ்டிக் கழிவுகளையும் மருத்துவ கழிவுகளையும் உட்கொண்டு வருகிறது. இதனால் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் எழுந்துள்ளது. பாலாற்றையும், பொதுமக்களையும், கால்நடைகளையும் பாதுகாக்கப் பாலாற்றில் குப்பை கழிவுகள், இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் கொட்டுபவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாலாற்றை தூய்மைப்படுத்தி பாலாற்றை பாதுகாக்க வேண்டும் என்று பாலாறு ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவுப் பணியாளர்கள் தர்ணா!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Cleaning workers strike in front of the municipal office!

நகராட்சி அலுவலகம் முன்பு சுமார் 100 துப்புரவு பணியாளர்கள் இரண்டு மாதமாக சம்பளம் வழங்கவில்லை எனத் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தினந்தோறும் குப்பைகளைத் தரம் பிரித்துச் சேகரிப்பதற்காக தற்காலிக துப்புரவுப் பணியாளர்கள் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நகராட்சி மூலமாக வழங்க வேண்டிய இரண்டு மாத ஊதியம் வழங்காததால் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் கட்ட முடியவில்லை என்று துப்புரவுப் பணியாளர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘தங்கள் குழுவில் ஏராளமான கணவனை இழந்த விதவைகள் உள்ளனர். எங்களுக்கு முழுமையான ஊதியத்தைக் கூட கொடுப்பதில்லை. மற்ற இடங்களில் 12000 ரூபாய் வரை மாத ஊதியம் துப்புரவுப் பணியாளர்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் பெண்களுக்கு 8000 ஆண்களுக்கு 9000 ஊதியம் வழங்குகிறார்கள். குப்பைகளை அள்ளுவதற்கு தேவையான அடிப்படை உபகரணங்கள் கொடுப்பதில்லை. குப்பைகளை அள்ளி எடுத்துச் செல்ல எங்களுக்கு வாகனமும் இல்லை. புதியதாக 12 வாகனங்கள் வந்து ஒரு மாதம் ஆகியும் அதை எங்களிடம் வழங்கவில்லை’ என பல்வேறு கோரிக்கைகளைக் குற்றச்சாட்டுகளாக பதிவு செய்து நகராட்சி அலுவலகம் முன்பு சுமார் இரண்டு மணி நேரமாக தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது சம்பந்தமாக நகராட்சி ஆணையர் நேரடியாக எங்களிடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு கூறும் வரை நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

பல மணி நேர போராட்டம்; பிடிபட்டது சிறுத்தை!

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
The leopard was caught in thiruppattur

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகிலேயே உள்ள தனியார் பள்ளியில் நேற்று (14-06-24) மாலை சிறுத்தை ஒன்று புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்கும் பணி நடைபெற்று வந்தது தொடர்ந்து சிறுத்தை கார் ஷெட் ஒன்றில் தஞ்சம் அடைந்தது. வனப்பகுதிகளே சுற்றிலும் இல்லாத நகர் பகுதியில் சிறுத்தை எவ்வாறு வந்தது என்பது பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

சிறுத்தை புகுந்த அந்த கார் ஷெட்டில் இரண்டு கார்களில் மொத்தமாக ஐந்து பேர் சிக்கி இருந்தனர். சிறுத்தை அச்சுறுத்தலால் 5 மணி நேரத்திற்கு மேலாக காருக்குள்ளேயே இருந்த அவர்கள் வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து, பலமணிநேர போராட்டத்திற்குப் பின் வனத்துறை உதவியுடன் நேற்று இரவு ஐந்து பேரும் மீட்கப்பட்டனர். தொடர்ந்து சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வந்தது. இதனால் அங்கு அதிகப்படியான வனத்துறை அதிகாரிகள் கூடியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த நிலையில், வனத்துறையினர் சிறுத்தைக்கு மயக்க ஊசியை செலுத்திய நிலையில், 11 மணி நேரத்திற்குப் பின் சிறுத்தை பிடிபட்டது. இதனால் பொதுமக்கள் தற்போது நிம்மதி பெருமூச்சி விட்டுள்ளனர்.