![Ranipet](http://image.nakkheeran.in/cdn/farfuture/vjXuJte-R5Hh4ORUv7hovsUomNWrAwsIqxzWUbt9YDE/1602225855/sites/default/files/inline-images/500_63.jpg)
இராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் காவல்துறை கண்காணிப்பாளராக மயில்வாகனம் பொறுப்பேற்றார். அவர் அப்பதவிக்கு வந்தபின் இராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா பகுதிகளில் பாலாற்றில் இரவு நேரங்களில் கடத்தப்பட்ட மணல் கொள்ளையை பெரும்பகுதியை தடுத்தார். அதேபோல் சாராய விற்பனையை அதிரடியாக தடுத்து நிறுத்தினார்.
அதேநேரத்தில் தொடர்ச்சியாக பணியாற்றும் காவல்துறையின் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு ஆய்வாளர்கள், ஏட்டுகள், தலைமை காவலர்கள் என அனைவருக்குமான உடல் நலனிலும் அக்கறை செலுத்த தொடங்கினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 14ந்தேதி ஆற்காடு காவல்நிலையத்தில் காவலர்களுக்கு மட்டுமேயான உடற்பயிற்சி கூடத்தை தொடங்கி திறந்துவைத்தார். காவலர்கள் தங்களது பணி நேரத்துக்கு பின் ஒரு மணி நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன்படி காவல்துறையை சேர்ந்தவர்கள் உடற்பயிற்சி செய்து வந்தனர்.
இது ஒரு மாதத்தை கடந்த பின் இந்த வாரம் உடற்பயிற்சி செய்தவர்களின் உடல் எடையை பரிசோதித்தபோது, ஒரேமாதத்தில் உடற்பயிற்சி செய்தவர்கள் கணிசமாக உடல் எடை குறைந்து இருந்தது தெரியவந்தது. 27 காவலர்கள் 2 முதல் 6 கிலோ வரை உடல் எடையை குறைத்திருந்தனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நினைவு பரிசு வழங்கி எஸ்.பி மயில்வாகனம் பாராட்டினார்.