Skip to main content

மத்திய அமைச்சர் முன்னிலையில்  காங்கிரஸ் - பாஜகவினர் இடையே கைகலப்பு!

Published on 15/07/2018 | Edited on 15/07/2018
pon


சேலத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையிலேயே கைகலப்பு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

காமராஜர் பிறந்த நாளையொட்டி சேலம் ஆனந்த பாலம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் இன்று (ஜூலை 15, 2018) காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சேலம் வந்திருந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

c a

 

இதற்காக காமராஜர் சிலையை சுற்றியுள்ள தடுப்புக் கம்பிகளில் அக்கட்சி நிர்வாகிகள் பாஜக காவிக்கொடியை கட்டினர். அந்த நேரத்தில், சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அங்கு வந்தனர். 

 

சிலையைச் சுற்றிலும் கம்பிகளில் பாஜக காவிக்கொடி கட்டியிருப்பதைப் பார்த்த அவர்கள் கொதிப்படைந்தனர். உடனடியாக கொடிகளை அவிழ்த்து அப்புறப்படுத்தும்படி கூறினர். இதைக் கேட்ட பாஜக நிர்வாகிகள், கொடிகளை அவிழ்க்க முடியாது என்று பதிலடி கொடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 


இதற்கிடையே காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காரில் நிகழ்விடம் வந்து சேர்ந்தார். அவர் வந்த பிறகும் காங்கிரசாரும், பாஜகவினரும் கடுமையாக வார்த்தைப்போரில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று கூட்டத்தில் ஒரு கல் பறந்து வந்து விழுந்தது. அந்தக் கல் சிலை மீது பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் மேலும் கோபம் அடைந்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே திடீரென்று கைகலப்பும் ஏற்பட்டது. 

 

c b

 

அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜகவினரை சமாதானப்படுத்தினார். சேலம் டவுன் காவல்துறையினரும் வந்து, அவர்களை சமாதானப்படுத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ''தடுப்புக்கம்பிகளில் கட்டப்பட்டுள்ள பாஜக கொடியை அவிழ்த்து வேறிடத்தில் கட்டும்படிதான் கூறினோம். அதற்கு அவர்கள் மறுத்ததால்தான் வாக்குவாதம் ஏற்பட்டது,'' என்றனர்.

 

இதையடுத்து பொன்.ராதாகிருஷ்ணன் தன் கட்சியினரிடம் கொடிகளை அவிழ்த்து வேறு இடத்தில் கட்டும்படி கூறினார். அவர்களும் உடனடியாக கொடிகளை அவிழ்த்து அப்புறப்படுத்தினர். இதன்பிறகு பொன்.ராதாகிருஷ்ணன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். பின்னர் காங்கிரஸ் கட்சியினரும் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இந்த சம்பவத்தால் நிகழ்விடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார்.