Skip to main content

தேவையின்றி மூக்கை நுழைத்து வேஷம் போடும் கமல்: கி.வீரமணி கண்டனம்

Published on 05/06/2018 | Edited on 05/06/2018
k.veeramani dk


காவிரி நதிநீர் உரிமைப் பிரச்சனையில் மிக நீண்ட காலமாக பல்வேறு வடிவங்களிலும் போராட்டங்கள், பேச்சு வார்த்தைகள் நடத்தியும் எந்த உருப்படியான பலனும் தமிழ்நாட்டுக்கு கிட்டாத நிலையில் புதிதாகக் கட்சி தொடங்கியுள்ள நடிகர் கமலகாசன் கருநாடக முதல் அமைச்சரை தன்னிச்சையாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி காவிரி பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறுவது பச்சைத் துரோகமே என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

மிக நீண்ட காலப் போராட்டத்திற்கு பிறகு - சட்டமன்றம்,  நீதிமன்றம் முதல் வீதிமன்றம் வரை நடந்த பல போராட்டங்களுக்குப்  பிறகு காவிரி நதி நீர் ‘வாரிய’த்தின் சொல்லுக்குப் பதில் ஆணையம் (Authority) என்று அமைக்கப்பட்டுள்ளது. 

 

 

 

நடுவர் மன்றத்திற்குப் பின் அப்படியே உச்சநீதிமன்றம் - “கோர்ட்  டிக்கிரி” - நீதிமன்ற செயல்படுத்தப்பட வேண்டிய உத்தரவு என்ற நிலையைத் தனது தீர்ப்பில் கூறியிருப்பினும், பிறகு சுய முரண்பாடாக ஆணை பிறப்பித்தது ஏன்? ஆணையம் அமைப்பதில், அது சுட்டிக்காட்டியபடி, அணைகளை ஆணையம் (வாரியம்) தனது முழுக் கட்டுப்பாட்டில் வைக்காமல், அந்தந்த மாநிலங்களின் கட்டுப்பாட்டிற்கே விட்டு விட்டது!
 

இதனால் நீர்ப் பங்கீட்டில், அதிக சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற அய்யமும், அறிவார்ந்த கேள்வியும் உள்ளடக்கமாக  இருக்கின்றன.
 

‘ஆணையம்’ (Authority) என்ற பெயர் சிறப்பானதுதான், ஆனால் அதன் அதிகாரம் எந்த அளவுக்குத் தமிழக விவசாயிகளின் நீர் பெறும் வாழ்வாதார உரிமைக்கு - சம்பா, தாளடி, குறுவை சாகுபடிகளுக்குத் துணை நிற்கும் என்பது இனி அது செயல்படும் முறையிலிருந்துதான் புரியும்.
 

கருநாடகத்தின் நிலைப்பாடு எத்தகையது?
 

“எங்களுக்கே நீரில்லை” என்ற கர்நாடக அரசின் (அது எக்கட்சி அரசானாலும்) ஒரே கோரஸ், சுருதி பேதமில்லா பாட்டு, அதே - ஒரே நிலைதான் எப்பொழுதுமே! அதில் வறட்சிக் காலங்களில் (Distress Formula) இரு மாநிலங்களும் பின்பற்றும் விதி முறைகள் ஆலோசனைகள் தெளிவாகவே கூறப்பட்டுள்ளன.
 

ஜூன் 12-க்கு இன்னும் ஆறே நாட்கள்தான் இடைவெளி  உள்ளது.

‘பேரு பெத்தபேரு தாக நீளுலேது!’ என்ற தெலுங்கு பழமொழிபோல ஆகிவிடக் கூடாது என்பதால் நமது உரிமையை  - வாதாடி - போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்ற கவலையும், பொறுப்பும், தமிழக விவசாயிகள், தமிழக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளுக்கு இருக்கும்; இப்போது, திடீரென்று கமலகாசன் அவர்கள் கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமி அவர்களைச் சந்தித்து கூட்டாக  ஒரு செய்தியாளர் பேட்டி நடத்தி, அதில் பேச்சு வார்த்தை நடத்துவோம் என்ற ‘புதுக் கரடியை’ விட்டுள்ளார்!
 

யாருக்குப் பிரதிநிதி நடிகர் கமல்காசன்?
 

இவர் யாருக்குப் பிரதிநிதியாக சென்றார்? இப்பிரச்சினைதொடங்கிய கடந்த 40 ஆண்டு காலத்திற்கு மேலாக வரலாற்று ரீதியான போராட்டங்கள், சட்ட வழக்குகள் போன்றவைகளுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?

 

 


அப்பிரச்சினையின் அகலமும், நீளமும், ஆழமும், அவர் அறிந்தவரா? அரசியலில் வாக்குப் பறிப்பதற்கு  இதுபோன்ற “வித்தைகள்” அவருக்குத் தேவைப்படலாம்; ஆனால் பேச்சு வார்த்தை நடத்திட வேண்டும் என்ற அவரது தத்துப்பித்து உளறலுக்கு ஏதாவது நியாயம் உண்டா?
 

சுமார் 28 முறை இப்பிரச்சினை தொடங்கிய காலம் முதல் 40 ஆண்டு காலத்திற்கு மேற்பட்ட காலமாக பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்ததின் விளைவுதான் திமுக - அதிமுக அரசுகள் உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்குகள் தொடுத்து நமது உரிமையை வென்றெடுத்திருந்தன.
 

இப்பொழுது கிடைத்த வெற்றிகூட எப்படி கிடைத்தது தெரியுமா?
 

அரசியல் கட்சிகள் மட்டுமல்ல; நம்மைப் போன்ற சமூக அமைப்புகளும், விவசாய அமைப்பினரும் பல முறை போராட்டங்கள் நடத்தி, சிறைச்சாலை முதல், தடியடி, துப்பாக்கிச் சூடு வரை சந்தித்து தான்  இந்த வெற்றியை ஓரளவு பெற முடிந்திருக்கிறது.

 

​    ​k.veeramani dk


 

இந்த வரலாறெல்லாம் தெரியாமல், திடீர் கட்சி துவக்கியவர்கள் இப்படி நடந்தால் அது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் பச்சைத் துரோகம் தானே!!
 

திரைப்படத்தில் ‘தசாவதாரம்’ ரசிக்கத் தகுந்ததாக இருக்கலாம்; ஆனால் அரசியல் களத்தில் இத்தகைய திடீர் அவதாரங்கள் எடுபடாது. தேவையின்றி மூக்கை நுழைத்து, தமிழ்நாட்டுப் பிரதிநிதி வேஷம் போடும் அரிதாரத்தை அவர் கலைத்து விடுவது நல்லது.

 

 

 

காவிரி நடுவர் மன்றம், அதன் இடைக்காலத் தீர்ப்பு, அதைத் துவக்கம் முதலே எதிர்த்த கர்நாடக அரசின் சட்ட மூர்க்கத்தனத்தை முறியடித்த உச்சநீதிமன்ற தீர்ப்புகள் - இவைகளை அவர் யாரிடமாவது பாடங் கேட்டுத் தெரிந்து கொண்டு பேசுவது அவருக்கும், அவர் பதியவிருக்கும் கட்சிக்கும் நல்லது!
 

கண்டனத்திற்குரியது
 

அவரது கருத்துச் சுதந்திரம், அரசியல் அவதாரம் - போராடிப் பெற்ற விவசாயிகளின் வாழ்வுரிமைக்கு உலை வைப்பதாக அமைந்து விடக் கூடாது என்பதுதான் அனைவரது கவலைக்கும் கண்டனத்திற்கும் முக்கிய காரணமும் அடிப்படையுமாகும். இவ்வாறு கூறினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டம் அமல்” - டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
D.K.Sivakumar said Meghadatu plan will be implemented when the Congress government is established in central

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டு காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறி வருகிறது.

இதற்கிடையே, விரைவில் மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், “தேவையான அனுமதிகளை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்கான ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் அமைக்கப்படவுள்ளன. தேவையான அனுமதிகளை கொடுத்தால் விரைவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும். பெங்களூர் நகரில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம். மேகதாது அணை விரைவில் கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஜனதா தளம்(எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலையொட்டி, கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “நாங்கள் எதிர்கட்சியாக இருந்த போது, மேகதாது திட்டத்திற்காக போராட்டம் நடத்தினோம். அதற்கு பணிந்து அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க ரூ.1,000 கோடி ஒதுக்கியது. பெங்களூரில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாததால் ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. மேகதாது திட்டத்தை அமல்படுத்தினால்தான் பெங்களூருக்கு குடிநீர் வழங்க முடியும். அதனால், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம். இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பயன் கிடைக்கும். இந்தத் திட்டத்திற்கு உச்சநீதிமன்றமும் ஆதரவாக கருத்து கூறியுள்ளது” என்று கூறினார்.

Next Story

'கர்நாடகாவில் நீர் இல்ல... காங்கிரஸ் பாஜகவுக்கு இங்க ஓட்டு இல்ல..'-தஞ்சையில் சீமான் பரப்புரை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'No water in Karnataka... No vote for Congress'-Seeman lobbying in Thanjavur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஹிமாயூன் கபீரை ஆதரித்து தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய அவர், ''இங்கு வாக்குகேட்டு வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, பாஜகவின் தலைவர்களின் கருத்து என்னவாக இருக்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது எனச் சொல்லும் கட்சிக்கு ஓட்டு கேட்டவர் முதல்வர் ஸ்டாலின். மானமிக்க, மண்ணை நேசிக்கக்கூடிய தலைவனாக இருந்தால் தண்ணி தரவில்லை, உங்களுக்கு எதற்கு ஓட்டு? கூட்டணியும் இல்லை, சீட்டு இல்லை என்று முடிவு எடுத்திருக்க வேண்டுமா வேண்டாமா? ஆனால் காங்கிரசுக்கு 10 சீட்டு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் என்ன முடிவெடுக்க வேண்டும் என்றால் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்றால் ஒரு தமிழரின் ஓட்டும் உனக்கு இல்லை. என்ற முடிவை நாம் எடுக்க வேண்டும். அப்படி தோற்கடித்தால்தான், ஏன் நம்மை தோற்கடித்தார்கள் என அவர்கள் சிந்திப்பார்கள். காவிரியில் மக்களுக்கான நீரை பெற்றுக் கொடுக்க முடியவில்லை; கச்சத்தீவை எடுத்துக் கொடுத்தோம்; மீனவர்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவில்லை; மீத்தேன் ஈத்தேன் என நிலத்தை நஞ்சாக்கினோம்; முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் தர மறுத்தோம் அதனால் நம்மை தோற்கடித்து விட்டார்கள் என உணர வேண்டும்.

தமிழக மக்களிடம் ஓட்டை வாங்க வேண்டும் என்றால் அவர்களுடைய உரிமைக்காக பேச வேண்டும். உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலையை நீங்கள் உருவாக்காத வரை நம்முடைய உரிமையை மீட்க முடியாது. கல்வி மாநில உரிமை அதை எடுத்துட்டு போனது காங்கிரஸ். அப்போது ஆட்சியில் இருந்தது திமுக. இந்த இரண்டு கட்சிகளும் மீண்டும் சேர்ந்து கொண்டு நம்மிடம் ஓட்டு கேட்டு வருகிறது. ஆனால் இதை நாங்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருப்போம். மறப்பது மக்களின் இயல்பு அதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பது போராளிகளின் கடமை. மறந்துடாத, விடாதே, அவர்களுக்கு ஓட்டு போடாதே எனச் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியதாக இருக்கிறது.

மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் எனச் சொல்லுகிறது காங்கிரஸ். அணைக் கட்டியே தீர வேண்டும் எனச் சொல்கிறது பாஜக. இதற்கு இங்கே இருக்கின்ற பாஜக தலைவர்கள், வேட்பாளர்களின் கருத்து என்ன? பேச மாட்டார்கள். காரணம் காவிரியில் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் எனப் பாஜக சொன்னால் அங்கு காங்கிரஸ் ஜெயிக்கும். காங்கிரஸ் சொன்னால் கர்நாடகாவில் பாஜக ஜெயிக்கும். அற்ப தேர்தல் வெற்றிக்காக, பதவிக்காக மக்களின் உரிமையை பலிகொடுக்க தயாரானவர்கள் இவர்கள். என் உரிமைக்கு, உணர்வுக்கு, உயிருக்கு நிற்காத உனக்கு என் ஓட்டு எதுக்கு என்று கேள்வியை எழுப்ப வேண்டும். நம்முடைய வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாத இவர்களுக்கு எதற்கு நமது வாக்கு என்ற சிந்தனை மக்களுக்கு வரவேண்டும்'' என்றார்.