
ராஜூவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014ல் தீர்மானம் நிறைவேற்றினார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், 20 ஆண்டுகள் தண்டனை நிறைவு செய்தவர்களை முன் கூட்டி விடுதலை செய்து, 1994ம் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, தன்னை முன்கூட்டி விடுதலை செய்ய கோரி 2015 ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் நளினி கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்கும்படி, 2016ல் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து நளினி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதி சசிதரன், நீதிபதி ஆர். சுப்ரமணியம் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அதில், அரசியல் சாசனம் 161-ன் படி சிறையில் உள்ள கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க எந்த தடையும் இல்லை. இந்த அரசாணையின் அடிப்படையில் 2200 ஆயுள் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.
மேலும், அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, நளினி உள்ளிட்டோரை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்து சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், தமிழக அரசால் எந்த முடிவும் எடுக்க இயலாத நிலையில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
கடந்த 24-ம் தேதி அனைத்து தரப்பு வாதமும் முடிவடைந்த நிலையில், இன்று காலை 10:30 நீதிபதி சசிதரன், நீதிபதி சுப்ரமணியன் அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.