சென்னை உயர்நீதிமன்றத்தில் மலையாளிகள் ஆதிக்கமா? கி.வீரமணி கண்டனம்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் மலையாளிகள் ஆதிக்கமா? தமிழ்நாட்டை ஏளனமாக நினைக்கும் அலட்சியப் போக்குதான் காரணமாக இருக்க முடியும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே நான்கு மலையாள நீதிபதிகள் இருக்கின்றனர். போதும் போதாதற்கு இப்பொழுது இன்னொரு மலையாளியும் நியமிக்கப்பட உள்ளார். சுப்பிரமணியம் பிரசாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தொழிலைச் செய்தது கூடக் கிடையாது.
பொதுவாக மற்ற மாநிலங்களில் நடைமுறை என்னவாக இருக்கின்றன? வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மாநிலத்தில் பணியாற்றினால் அவர்களை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் வெளி மாநிலக்காரர்கள் இங்கு பணியாற்றினால், அவர்களுக்குத் தாராளமாகவே உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்குச் சிபாரிசு செய்யப்படும் நிலை இருக்கிறது. ஏற்கெனவே உள்ள மலையாள நீதிபதிகளும் அப்படி நியமனம் செய்யப்பட்டவர்கள்தான்.
இப்பொழுது நியமிக்கப்பட உள்ள திரு. சுப்பிரமணியம் பிரசாத் அவர்களோ இங்கு பணியாற்றியதே கிடையாது. இப்படிப்பட்டவர்கள் சிபாரிசு செய்யப்படுவது தமிழ்நாட்டை ஏளனமாக நினைக்கும் அலட்சியப் போக்குதான் காரணமாக இருக்க முடியும். இந்த நிலை கண்டிக்கத்தக்கது - தவிர்க்கப்பட வேண்டியதும்கூட!
போராட்ட வடிவமாக மாறுவதற்கு முன் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், உச்சநீதிமன்றமும் மறுபரிசீலனை செய்வார்களாக! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.