Skip to main content

பிரபல ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது!

Published on 15/08/2018 | Edited on 15/08/2018
rowdy prakash


சேலம் குமரகிரிபேட்டை ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த தங்கராஜ் மகன் பிரகாஷ் என்கிற சிவபிரகாஷ் (30). கடந்த ஜூலை 31ம் தேதி, அம்மாபேட்டை நாமமலை பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணி என்பவர் உழவர் சந்தை அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பிரகாஷ் அவரிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயன்றார்.

பாலசுப்ரமணி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அம்மாபேட்டை போலீசார், ரவுடி பிரகாஷை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே அரசு பஸ் மீது கல் வீசி தாக்கியது, மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.

தொடர் குற்றத்தில் ஈடுபட்டு வந்த ரவுடி பிரகாஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அம்மாபேட்டை போலீசார் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி மூலமாக சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தனர். அவருடைய உத்தரவின்பேரில் பிரகாஷை குண்டர் சட்டத்தில் இன்று கைது செய்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

‘எனக்கு பிடித்த சேனல்தான் வைக்க வேண்டும்’ - சிறை வார்டன்களுக்கு ரவுடி கொலை மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 rowdy smashed CCTV cameras in Cuddalore Central Jail

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை  கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். பிரபல ரவுடி  எண்ணூர் தனசேகரன் இந்த சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக உதவி ஜெயிலரை, அவரது வீட்டில் சிறைக் காவலர் உதவியுடன், ரவுடி  எண்ணூர் தனசேகரன் பெட்ரோல் குண்டு வீசி  எரிக்க முயற்சி செய்தார். 

இவர் மீது இது குறித்து கடலூர் முத்துநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி எண்ணூர் தனசேகரன் பலமுறை சிறை அதிகாரிகளை கண்டித்து போராட்டங்கள் மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடலூர் மத்திய சிறைச்சாலையில் இரவு கைதிகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது  ரவுடி எண்ணூர் தனசேகரன் தனக்கு பிடித்த சேனலை வைக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

மேலும் திடீரென்று சிறை வளாகத்தில் இருந்த சிசிடிவி. கேமராக்களை உடைத்துள்ளார். இது குறித்து கடலூர் முத்துநகர் காவல் நிலையத்தில் சிறைத்துறை அதிகாரிகள்  புகார் அளித்தனர். அதில் எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி. கேமராக்களை உடைத்ததாகவும், சிறை வார்டன்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் இதனை கண்டித்து பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் நேற்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Next Story

ரவுடிகளின் அட்ராசிட்டி; தொழிலாளி வெட்டிக் கொலை - ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
shoot on rowdy in nellai
சந்துரு- பேச்சித்துரை

நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூர் பகுதி அருகே உள்ளது தென்திருப்புவனம் கிராமம். இங்குள்ள காளி என்பவரின் மகன் 23 வயதேயான பேச்சித்துரை. நேற்றைய தினம் மாலை பேச்சித்துரையும், தன் நண்பரான கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சந்துருவும், மதுவுடன் கஞ்சாவையும் சேர்த்தடித்தவர்களுக்குப் போதை உச்சந்தலைக்கு ஏறியிருக்கிறது.

போதையில் கண்மண் தெரியாமல் சாலையில் சென்ற பேச்சிதுரையும், சந்துருவும் வீரவநல்லூரையடுத்த வெள்ளங்குளியில் சிலருடன் தகராறு செய்து மிரட்டியுள்ளனர். பின்பு நெல்லை - அம்பை நெடுஞ்சாலையில் வெள்ளாங்குழிப் பகுதியில், பால வேலையில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்களிடம் வம்பிற்கு இழுத்து பிரச்சினை செய்திருக்கிறார்கள். வாய்க்கு வந்தபடி பேசி வீண் தகராறு செய்தவர்கள் அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி அதன் கண்ணாடியை உடைக்க காரில் வந்தவர்கள் அலறித் தப்பியிருக்கிறார்கள்.

shoot on rowdy in nellai

பின்பு மறுபடியும் பாலக்கட்டுமானப் பக்கம் சென்றவர்கள் மீண்டும் தொழிலாளர்களிடம் வம்புத் தகராறு செய்ய, அங்கு பணியிலிருந்த மேஸ்திரியான விருதுநகர் மாவட்டம் சாத்துரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் அவர்களைக் கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரமான பேச்சித்துரையும் சந்துருவும் சேர்ந்து அரிவாளால் கருப்பசாமியை வெட்டியிருக்கிறார்கள். இதில் கருப்பசாமியின் பின் தலையில் ஆழமான வெட்டு விழ ரத்தம் பீறிட கதறி வீழ்ந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெட்டுச்சம்பவம் நடக்கும்போதே அதனைத் தடுக்கப் பாய்ந்த சக தொழிலாளருமான மூலச்சி கிராமத்தின் வெங்கடேஷ் என்பவரை அரிவாளால் தாக்கியவர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பியிருக்கிறார்கள்.

வெள்ளாங்குழி வழியாகச் சென்ற இருவரும் எதிரேவந்த வீரவநல்லூர் செல்லும் அரசுப் பேருந்தை அரிவாட்கள் முனையில் நிறுத்தியவர்கள் கண்ணாடியை உடைத்து டிரைவரையும் வெளியே இழுத்துப் போட்டு வெட்ட முயன்றுள்ளனர். அப்போது மிரண்டு போன பயணிகளில் சிலர் சுதாரித்துக் கொண்டு அதனைத் தடுக்க முயன்றிருக்கிறார்கள். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உயிரைக் காப்பாற்ற ஓடிய டிரைவரை இரண்டு பேர்களும் அரை கிலோ மீட்டர் தொலைவு வரை அரிவாட்களால் ஓங்கிய படியே துரத்திச் சென்றிருக்கிறார்கள். மாலை நேரம் அந்தச் சாலையே இதனால் பதட்டமாகியிருக்கிறது. ஆனாலும் வெறியில்  கத்தியபடியே இருவரும் தாமிரபரணி ஆற்றுக்கரையை நோக்கிப் போன தகவல் வீரவநல்லூர் போலீசுக்குத் தெரியவர, தாமதம் செய்யாமல் காவலர் செந்தில்குமாரும், மற்றொரு காவலரும் பைக்கில் அவர்களைப் பிடிப்பதற்காக விரைந்தனர்.

ஆற்றாங்கரையோரம் அவர்களை போலீசார் இருவரும் மடக்கிபிடிக்க முயற்சி செய்த போது, எதிர்பாராத வகையில், இருவரும் மூர்க்கத்தனமாக காவலர் செந்தில்குமாரை மடக்கி அரிவாளால் அவரின் கையை வெட்டிவிட்டுத் தப்பியிருக்கிறார்கள். சக காவலர் உட்பட சிலர் காயமடைந்த காவலர் செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

shoot on rowdy in nellai

காவலர் வெட்டப்பட்டது ரவுடிகளின் அட்டகாசம் பற்றிய தகவல் மாவட்ட எஸ்.பி.யான சிலம்பரசனுக்குத் தெரியவர உடனடியாக அவர் தன்னுடைய தனிப்படையை அனுப்பியிருக்கிறார்.

தாமிரபரணிக் கரையில் பதுங்கிய அவர்களை தனிப்படையினர் தேடி சலித்தெடுத்ததில் அவர்கள் முக்கூடல் பக்கமுள்ள சாலையினருகேயுள்ள மருதூர் வாழைத் தோப்பில் பதுங்கியிருந்தது தெரியவர அவர்களை தனிப்படை ரவுண்ட்அப் செய்திருக்கிறது. அவர்களைப் பிடிக்க முயற்சி செய்த போது அவர்கள் தப்பியோடியிருக்கிறார்கள். விடாமல் துரத்திய தனிப்படையினர் எச்சரித்தும் அவர்கள் தப்பியோட பேச்சித்துரையின் காலில் சுட்டுப் பிடித்திருக்கிறார்கள். இதில் அவனது சகா சந்துரு லாவகமாகத் தப்பியோடியிருக்கிறான். ரவுடி பேச்சித்துரையை மீட்ட போலீசார் முக்கூடலின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க அங்கு அவருடைய காலில் உள்ள குண்டு அகற்றப்பட்டிருக்கிறது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு பேச்சித்துரையை அனுப்பிவைத்திருக்கின்றனர்.

இதனிடையே சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி.யான சிலம்பரசன். தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவலர் செந்தில் குமாரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார். வெள்ளாங்குழியில் காரை மறித்து தகராறு செய்தவர்கள் கருப்பசாமி என்பவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு ஸ்ரீ பத்மநல்லூர் பக்கம் பொது மக்களிடம் தகராறு செய்திருக்கிறார்கள் தற்காப்பிற்காக காவலர், பேச்சித்துரையின் காலில் சுட்டுப் பிடித்தனர். சந்துருவைக் கைது செய்திருக்கிறோம் என்றார் எஸ்.பி.

shoot on rowdy in nellai

இளவயதான பேச்சித்துரையும், சந்துருவும் நண்பர்கள். வேலையற்ற இவர்களிடம் போதைப் பழக்கம் தொற்றியிருக்கிறது. மதுவுடன் சேர்த்து கஞ்சா அடிக்கும் பழக்கம் ரெகுலராம். அதிலும் கஞ்சாவைக் கசக்கி விட்டால் பேச்சித்துரைக்கு போதை, உச்சிமண்டைக்கு ஏறி மூளையின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடுமாம். நாடி, நரம்பு, ரத்தம், புத்தி, சதைகளில் போதை ஏறி சைக்கோவாகவே மாறிவிடுவானாம் இதனால் தான், என்ன செய்கிறோம் என்று அவனுக்கே தெரியாமல் போய்விடுமாம். அந்த லெவலுக்குப் போனவன் வருவோர் போவோரிடம் வம்பிழுப்பது அடிதடி என்றாகி கொலை வரை போயிருக்கிறது. முக்கூடல், சேரன்மகாதேவி, வீரவநல்லூர் காவல் நிலையங்களில் பேச்சித்துரை மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி என பல்வேறு வழக்காகி காவல் நிலைய ரவுடி பேனலிலும் இடம் பிடித்துள்ளான். இந்த அடாவடி காரணமாக அடிக்கடி அரசு விருந்தாளியாகப் போய்வரும் ரவுடி பேச்சிதுரையின் மீது குண்டாசும் பாய்ந்திருக்கிறது என்கிறார் அந்தப் பகுதியின் மூத்த காவலர் ஒருவர்.

ரவுடி பேச்சித்துரையைப் போன்று இளம் வயதிலேயே போதைக்கு அடிமையாகி முக்கூடல், வீரவநல்லூர் மற்றும் சேரன்மகாதேவி சுற்றுப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இப்படி சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள் என்கிறார்கள் பகுதிவாசிகள்.