
சேலம் குமரகிரிபேட்டை ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த தங்கராஜ் மகன் பிரகாஷ் என்கிற சிவபிரகாஷ் (30). கடந்த ஜூலை 31ம் தேதி, அம்மாபேட்டை நாமமலை பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணி என்பவர் உழவர் சந்தை அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பிரகாஷ் அவரிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயன்றார்.
பாலசுப்ரமணி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அம்மாபேட்டை போலீசார், ரவுடி பிரகாஷை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே அரசு பஸ் மீது கல் வீசி தாக்கியது, மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.
தொடர் குற்றத்தில் ஈடுபட்டு வந்த ரவுடி பிரகாஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அம்மாபேட்டை போலீசார் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி மூலமாக சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தனர். அவருடைய உத்தரவின்பேரில் பிரகாஷை குண்டர் சட்டத்தில் இன்று கைது செய்தனர்.