கரோனா தொற்று நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் நடைமுறையில் இருக்கும் ஊரடங்கால் கஷ்டப்படும் ஏழைகளுக்கு சலிக்காமல் தன்னார்வலர் அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் தனி நபா்களும் தங்களால் இயன்ற உணவு உள்ளிட்ட பொருட்களை தினமும் நேரில் வழங்கி வருகின்றனா்.
இந்தநிலையில் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பித்த நாளில் குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சோ்ந்த இளைஞா்கள் சிலா் "தக்கலை கரோனா வாலன்டா்ஸ்" எனும் தன்னார்வ வாட்ஸ் அப் குரூப்பை தொடங்கி சாலையோரத்தில் வசிக்கும் ஏழைகள் அதே போல் சாலைகள் மற்றும் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளா்களுக்கு உணவுகள் வழங்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளனா். முதல் நாளில் 50 பேருக்கு உணவு என்று தொடங்கிய அவா்கள் தங்களின் விடா முயற்சியால் தற்போது தினமும் மதியம் சுமார் 350 பேருக்கு உணவு வழங்குகின்றனா்.
அதோடு காலையில் சுமார் 500 பேருக்கு கபசுர குடிநீா் மற்றும் மாலையில் கிழங்கு காப்பி வழங்குகின்றனா். இவா்களுடைய மனிதாபிமானத்தையும் உதவும் குணத்தையும் கண்டு பாராட்டிய பலா் அந்த குரூப்பில் இணைந்து தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில் மே தினத்தில் கரோனாவை துரத்துவதில் முக்கிய பங்காற்றி வரும் தூய்மை பணியாளா்களை பாராட்டி மரியாதை செலுத்தும் விதமாக தக்கலை கரோனா வாலன்டா்ஸ் குரூப்பை சோ்ந்தவா்கள் அந்த தூய்மை பணியாளா்களின் பாதங்களை கழுவி பூ மாலை அணிவித்து கேக் ஊட்டி மரியாதை செலுத்தினார்கள். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பார்த்த பலா் அந்த இளைஞா்களை பாராட்டினார்கள். அந்த இளைஞா்களின் சமுதாய பணி தொடர வாழ்த்துகிறோம்.