Skip to main content

பல லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  கனிமொழி வழங்கினார்!

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

Kanimozhi provided several lakhs of welfare assistant in Dindigul

 

திண்டுக்கல் மாவட்டத்திற்கு இரண்டு  நாட்கள் ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ள பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் கனிமொழி தலைமையிலான குழுவினர்  மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி முன்னிலையில் திண்டுக்கல் பகுதியில் பல்வேறு இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

 

இந்த  ஆய்வின் போது திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் சின்ராஜ், ராஜ்வீர் டீலர், நரேந்திர குமார், டாக்டர் தலாரி ரங்கய்யா, ஷியாம் சிங் யாதவ், அப்துல்லா சிர் ஆகியோர் உடனிருந்தனர் பாராளுமன்ற நிலைக்குழுவினர், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், எத்திலோடு ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

 

அதனைத்தொடர்ந்து, அங்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்தை பார்வையிட்டனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அரங்கை பார்வையிட்டனர். மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு அளிக்கப்படும் தொழிற்பயிற்சிகள், தொழில் தொடங்கிட வழங்கப்படும் வங்கி கடனுதவிகள், உற்பத்திபொருட்களை சந்தைப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், அதன்மூலம் கிடைக்கும் வருமானம், மகளிரின் பொருளாதார மேம்பாடு ஆகியவை குறித்து மகளிர் சுயஉதவிக் குழுவினரிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் கிராம பஞ்சாயத்து சேவை மையத்தின் செயல்பாடுகளை கேட்டறிந்தனர். 

 

Kanimozhi provided several lakhs of welfare assistant in Dindigul

 

பின்னர் அங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று, குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கற்றல் முறை, வழங்கப்படும் உணவுகள், சமையலறை, குடிநீர் வசதி, சுற்றுப்புற சுகாதாரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இன்றைய குழந்தைகள்தான் நாளைய எதிர் கால சமுதாயம் என்பதை அறிந்து, அவர்களுக்கு கல்வி அளிக்கவும், பசியின்றி கல்வி கற்கவும் அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்கள் என்று, இத்திட்டத்தின்படி வாரந்தோறும் வழங்க வேண்டிய உணவு வகைகள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், சமையலறை, பாத்திரங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். 

 

Kanimozhi provided several lakhs of welfare assistant in Dindigul

 

அதனைத்தொடர்ந்து, பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம்(PMAY-G) மூலம் இலவச வீடுகள் கட்டி பயனடைந்த பயனாளிகளுடன் கலந்துரையாடினர். பயனாளிகளை தேர்வு செய்யும் முறை, இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் சிலுக்குவார்பட்டியில் நியாய விலைக் கடையை பார்வையிட்டு, அங்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்தும், பொருட்கள் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து சிலுக்குவார்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட் டத்தின் கீழ் செல்வராஜ் தோட்டத்தில் இருந்து பாலு தோட்டம் வரை அமைக்கப்பட்ட நீர் உறிஞ்சும் அகழிகளை பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது, பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் கனிமொழி  20 நபர்களுக்கு ரூ.27.50 இலட்சம் மதிப்பிலான வங்கி கடனுதவிகள், 23 நபர்கள் தங்கள் விளைநிலங்களில் பலன் தரும் மரக்கன்றுகள் நடவு செய்வதற்காக ரூ.7.3 இலட்சம் மதிப்பிலான ஆணைகள் என மொத்தம் ரூ.34.80 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்