Skip to main content

‘உயிரிழப்பு அதிகரிப்பு’ - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Kallakurichi Karunapuram incident CM MK Stalin discussion

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய  தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய மரண சம்பவம் எதிரொலியாகத் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாகத் தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

Kallakurichi Karunapuram incident CM MK Stalin discussion

இந்நிலையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சட்டமன்ற கூட்டத்தொடர் கூடும் முன்பு உதயநிதி ஸ்டாலின், எ.வ. வேலு, மா. சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழுவினர் மற்றும் அதிகாரிகள்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தற்போதைய நிலவரம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர்கள் குழுவினர் எடுத்துக் கூற உள்ளனர். அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையொட்டி சட்டமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவான பதிலளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

சார்ந்த செய்திகள்