Skip to main content

"உன்னுடைய வலி என்றால் நீதான் குரல் கொடுக்க வேண்டும்!" - பா.ரஞ்சித்

Published on 03/05/2018 | Edited on 04/05/2018
pa. ranjith

 

தென்னிந்திய திரையுலக பெண்கள் சங்கத்தின் தொடக்க விழாவில் இயக்குனர் பா. ரஞ்சித் கலந்துகொண்டு பேசியது," முதலில் மே தின நல்வாழ்த்துக்கள். பெண்களுக்காக பெண்களே பேச தொடங்கும் சங்கம். நம் சமூகத்தில் நான் உனக்காக பேசுவேன் ஆனால் நீ பேச கூடாது என்கிற சமூகத்தில் நாம் இருக்கிறோம். ஒடுக்குமுறை என்பது சாதி, மதம் என்று பல்வேறு விதமாக இருக்கிறது. ஆனால், பெண்களின் மீதான ஒடுக்குதல் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஏதோ உறவுகளால் ஒரு பெண் தினசரி ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டுத்தான் இருக்கிறார்கள். இந்த சமூகத்தில் ஒடுக்கப்படுவதை, ஒடுக்கப்படுபவர்களே அதை ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படி ஒடுக்கப்படுபவர்களை எதிர்க்கும் சங்கமாக தான் இதனை பார்க்கிறேன். இந்த சங்கம் வீரியமாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண்களின் ஒடுக்குமுறை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆதலால், இந்த சங்கம் அவர்களுக்காக போராடும் என்று நம்புகிறேன். ஒடுக்குமுறைக்கு எதிராக போராட்டங்கள் பலவிதமான வடிவங்களில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. இதனால் மாற்றம் ஏதேனும் இருக்கிறதா என்றால் மிகவும் சொற்பமான சதவீதத்தில் தான் இருக்கிறது. பெண்களின் மீதான பாலியல் சுரண்டல்கள் கூட ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு வடிவமாகவே இருக்கிறது. இன்றும் வீட்டை விட்டு வெளியே சென்று வேலை பார்ப்பதனால் தான்  பெண்கள்  பாலியல் ரீதியாக சுரண்டல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள் என்று நாம் நம்புகின்றோம். அப்படிப்பட்ட சமூகத்தில் தான்  நாமும் இருக்கிறோம். இதெல்லாம் நம்மிடம் இயல்பாகவே இருக்கிறது. சமீபத்தில் கூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் உடை தான் வன்கொடுமைக்கு காரணம் என்று சொல்லப்பட்டது.

அப்போது குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்களே, அதற்கு காரணமும் உடை, நடத்தைதானா? இந்த ஏற்றுக்கொள்ளப்படுகிற வடிவம் உடைக்கப்பட வேண்டும். ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஆட்களாக நாம் மாற வேண்டும். இச்சங்கமும் அப்படி ஏற்றுக்கொள்ள மறுக்கும் என்று நம்புகிறேன். தொண்டை கிழிய கிழிய கத்தினால்தான், நாம் நம்முடைய உரிமைகளை பெற முடியும். உன்னுடைய பிரச்சனையை என்னிடம் சொல்லு நான் அதை பார்த்துக்கொள்கிறேன் என்பதே முட்டாள்தனமான ஒன்று. உன்னுடைய பிரச்சனை, உன்னுடைய வலி என்றால் நீதான் குரல் கொடுக்க வேண்டும். நிச்சயமாக எங்களை போன்று நிறைய நபர்கள் உங்களுக்கு துணையாக நிற்பார்கள் "என்று கூறினார்.                

சார்ந்த செய்திகள்

Next Story

கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரம்; 3 வயது சிறுமிக்கு தாயால் நேர்ந்த துயரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
The cruelty is unbearable to hear; Mother's tragedy of 3-year-old girl

பெண்களுக்கு எதிரான அதுவும் பெண் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரச் செயல் ஒன்று தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது. பெற்ற தாயே தன்னுடைய 3 மகளை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பி வைத்த கொடூர சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் 3 வயது மக்களை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். மனைவியும் மகளும் தூத்துக்குடி ஏரல் புதுமனை தெருவில் வசித்து வந்துள்ளனர். அதே ஏரல் புதுமனை தெருவில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். உதயகுமார் மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உதயக்குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பெண் அவருடைய வீட்டில் எடுத்த வீடியோக்களை செல்போன் கடை வைத்திருக்கும் உதயகுமாருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவருடைய மூன்று வயது பெண் குழந்தையின் ஆடை இல்லாமல் இருக்கும் வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த கொடூரன் உதயகுமார் இணையத்தில் அப்லோட் செய்ததாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் வேலை செய்து வரும் பெண்ணின் கணவருக்கு நண்பர்கள் சிலர் மூலம் இந்த தகவல் சென்றுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் உதயகுமார் மீதும் மனைவி மீது ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில் உதயகுமாரும், அவருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணும், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

Next Story

‘பெண்களுக்கு பாதுகாப்பான பயணம்’ - மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய முன்னெடுப்பு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Safe Travel for Women Metro Rail's New Initiative

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதற்காக மெட்ரோ ரயில் நிறுவனம் கூடுதல் நடவடிக்கையாக அதன் பாதுகாப்பில் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற பெண் பாதுகாப்புப் பணியாளர்களை உள்ளடக்கிய ‘பிங்க் ஸ்குவாட்’ ஐ (Pink Squad) இன்று (15.02.2024) அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பாதுகாப்புக் குழுவில் பிங்க் ஸ்குவாட் பாதுகாப்பு சேவை உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்டங்கள் துறை இயக்குநர் அர்ச்சுனன் முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஜெயலக்ஷ்மி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அ.சித்திக் கூறுகையில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் முழு சிசிடிவி கேமரா கண்காணிப்பு அமைப்புகளை வழங்கி வருகிறது. இருப்பினும், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிசிடிவி கேமரா கண்காணிப்பு வழங்குவதைத் தவிர, ஈவ் டீசிங் மற்றும் பெண்களுக்கு எதிரான பிற குற்றங்களைத் தடுக்க அதிக கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், பெண் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு சேவையை வழங்குவதற்காகவும் பிங்க் ஸ்குவாட் அணியை நியமித்துள்ளது.

பிங்க் ஸ்குவாட் உறுப்பினர்கள் தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்பு நுட்பங்களில் நன்கு பயிற்சி பெற்றதுடன் வாடிக்கையாளர் சேவை மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளனர். முதல் கட்டமாக இந்த குழுவில் 23 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயணிகள் அதிகமாக பயணிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களான சென்ட்ரல் மெட்ரோ, ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுவாக அனைத்து பயணிகளுக்கும் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள நபர்களுக்கும் பாதுகாப்பான பயணம் மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து செய்து வருகிறது” எனத் தெரிவித்தார்.