Skip to main content

வேகப்பந்து வீச்சால் வேகமெடுத்த இந்தியாவின் வெற்றி! ஆனாலும் தொடரும் சரித்திர சோகம்!

Published on 04/01/2024 | Edited on 05/01/2024
India's victory accelerated by fast bowling! But the historical tragedy continues!

​இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் நேற்று (03.01.2024) தொடங்கியது. முதல் டெஸ்ட் பொட்டியில் வெற்றி பெற்று 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 55 ரன்களுக்கும், இந்தியா 153 ரன்களுக்கும் ஆட்டமிழந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 62க்கு 3 என்ற நிலையில் இருந்தது.

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தென் ஆப்பிரிக்கா அணி தொடர்ந்தது. ஒரு பக்கம் மார்க்ரம் நிலைத்து நின்று ஆட, மறுபக்கம் தென்னாபிக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இரண்டாம் நாளில் பெடிங்காம் 11 ஜான்சன் 11 தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கங்களில் அவுட் ஆகி வெளியேறினர். மார்க்ரம் மட்டும் அபாரமாக விளையாடி சதமடித்து 106 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மிகவும் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகேஷ் குமார் இரண்டு விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் பிரசித் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இந்த முறை ஜெய்ஸ்வால் ஓரளவு அதிரடியாக ஆடி 28 ரன்கள் எடுத்தார். கில் 10 ரன்களிலும், விராட் கோலி 12 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் ரோஹித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர். 12 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் 17 ரன்களும்,  ஷ்ரேயாஸ் 4 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர்.

இந்திய அணியின் வெற்றிக்கான ரன்களை ஷ்ரேயாஸ் அசத்தலான பவுண்டரி மூலம் தேடித்தந்தார். இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1  என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது. ஆட்டத்தின் இரண்டாம் நாளின் பாதியிலேயே போட்டிக்கான முடிவு கிடைக்கப் பெற்றது. இந்த ஆட்டத்தில் மொத்தம் 107 ஓவர்களே வீசப்பட்டுள்ளது. 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ஓவர்களில் முடிவு கிடைத்த போட்டியாக இன்றைய போட்டி அமைந்தது. என்னதான் இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்திருந்தாலும், தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாத அணி என்னும் மோசமான வரலாற்றை தொடர்கிறது.

சேனா (SENA) நாடுகள் என்று அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி, மற்ற மூன்று நாடுகளிலும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. தென்னாபிரிக்காவில் மட்டும் கைப்பற்ற முடியாத ஒரு மோசமான வரலாறு இன்னும் தொடர்கிறது. தோனி தலைமையில் 2010 ஆம் வருடம் நடைபெற்ற சுற்றுப்பயணத்தின் போதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்று தொடரை சமன் செய்தது.

இந்நிலையில், டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்ததை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவின் பிட்சுகளின் தன்மை பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.  கிரிக்கெட் விமர்சகர்களும் இந்திய ரசிகர்களும் ஒருவேளை இந்தியாவில் இந்த போட்டி நடைபெற்று இருந்தால், இந்திய பிட்சுகளின் தன்மை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கும், ஆனால் தென்னாப்பிரிக்காவிலும் இப்படி இரண்டு நாட்களில் முடிவு கிடைக்கிறது. இதற்கு மற்ற நாடுகள் என்ன சொல்லப் போகின்றன என்றும் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

-வெ.அருண்குமார்  

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.