Skip to main content

ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் தொடர்பான வழக்கு; மனுதாரருக்கு நீதிபதி உத்தரவு!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
 The judge ordered the petitioner on Armstrong case

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் உடலைக் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த தொடர்பான வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இடம் நெரிசல் மிகுந்தி பகுதி எனக்கூறி வரைபடங்களை சமர்ப்பித்து வாதாடினார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி பவானி சுப்பராயன், “சட்டப்படி குடியிருப்பு பகுதிகளில் உடலை அடக்கம் செய்ய முடியாது. ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. உடல் அடக்கம் செய்யக்கோரும் இடம் நெருக்கடியான பகுதி. மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் தான் அடக்கம் செய்ய முடியும். வேறு பெரிய சாலை, விசாலமான இடம் இருந்தால் சொல்லுங்கள். இந்த யோசனை குறித்து மனுதாரரிடம் கேட்டுச் சொல்லுங்கள்; அதன்பிறகு உத்தரவு பிறப்பிக்கிறேன்” என்று கூறி காலை 10:30 மணிக்கு மனுதாரர் தரப்பினர் முடிவைச் சொல்ல வேண்டும் என்று நீதிபதி வழக்கு விசாரணையை 10:30 மணிக்கு ஒத்திவைத்தார். ஆனால், 12 மணிக்குத் தனது முடிவைச் சொல்வதாகப் பொற்கொடி தரப்பினர் முறையிட்டனர்.

அதன்படி, 12 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, “நாளை பள்ளிகள் திறக்கவுள்ளதால் இன்றே உடலை அடக்கம் செய்ய வேண்டும். புதிதாக குறிப்பிடும் நிலத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து அரசு ஆராய வேண்டும். குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம். ஒதுக்குபுறமாக விசாலமான இடத்தை தேர்ந்தெடுங்கள். நல்ல இடத்தில் மணிமண்டபம் அமைக்கலாம். அம்பேத்கர் மணிமண்டபம் போல விசாலமான இடத்தில் மணிமண்டபம் அமைத்தால் நிகழ்ச்சி நடத்த இடையூறு இருக்காது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அதிகார எல்லையை தாண்ட முடியாது. உடல் அடக்கம் தொடர்பான இடத்தை தேர்வு செய்வதில் அரசுதான் முடிவு எடுக்க முடியும்.” என்று கூறி வழக்கு விசாரணையை மதியம் 2:15 மணிக்கு ஒத்திவைத்தார். மேலும், அரசு தரப்பில் ஒதுக்கப்பட்ட திருவள்ளூரில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய பரிந்துரை செய்ததை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மனுதாரருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், இந்த வழக்கு 2:15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருவள்ளூர் பொத்தூரில் உடலை அடக்கம் செய்ய மனுதாரர் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதையடுத்து நீதிபதி, “திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பொத்தூரில் நிலத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்து கொள்ளலாம். பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம். கட்சி அலுவலகத்தில் நினைவு மண்டபம் அமைக்க எந்த பிரச்சனையும் இல்லை. ஆம்ஸ்ட்ராங் நினைவாக நினைவு மண்டபம், மருத்துவமனை அமைக்க விரும்பினால் அரசிடம் உரிய அனுமதி பெற்ற வேண்டும். கண்ணியமான முறையில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும்” என்று தீர்ப்பளித்து போதுமான பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

சார்ந்த செய்திகள்