Skip to main content

’18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் நீதிமன்றத்தை நாடி இழுத்தடிக்க நினைப்பது தமிழக மக்களுக்கு நல்லதல்ல’-ஈஸ்வரன்

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
es

 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
’’18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு தமிழக அரசிற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாதென்பது தெரிந்ததுதான். தீர்ப்பை ஒவ்வொருவரும் மாறுபட்ட கோணத்தில் பார்த்தாலும், விமர்சித்தாலும் இது அரசியல் விளையாட்டு என்பதுதான் உண்மை. நீதிமன்றத்தின் தீர்ப்பை காட்டிலும் மக்கள் மன்றத்தின் தீர்ப்புதான் சக்தி வாய்ந்தது. நீதிமன்றத்திலே வழக்கை போட்டுவிட்டு தொடர்ந்து மக்களை குழப்புகின்ற விதத்தில் அறிக்கை போர்கள் நடப்பதால் யாருக்கு லாபம். 18 சட்டமன்ற தொகுதிகள் உறுப்பினர்கள் இல்லாத தொகுதிகளாக நீண்ட நாட்களாக தொடர்ந்து அந்தந்த தொகுதி மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது.

 

 ஜனநாயகத்தில் மக்களின் உரிமைகளை பாதுகாப் பதற்காகதான் நீதிமன்றங்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் மக்கள் யாரோடு இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வழக்கிற்காக மட்டுமல்ல பிரதான தலைவர்கள் தமிழக அரசியல் களத்தில் இல்லாத சூழ்நிலையில் மக்கள் யாரோடு இருக்கிறார்கள் என்பதை ஜனநாயகம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த 18  தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதன் மூலமாகதான் தமிழக மக்கள் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும். 

 

தமிழகத்தில் இருக்கின்ற எல்லா தலைவர்களும் பெரும்பான்மையான மக்கள் தங்களோடுதான் இருக்கிறார்கள் என்று சுயதம்பட்டம் அடித்து கொண்டிருக்கின்ற வேளையில் உண்மை தெரிய வேண்டும். பல அரசியல் பிரச்சினைகளுக்கும், ஜனநாயகத்தில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்களுக்கும் அதுதான் தீர்வாக இருக்கும். மேல்முறையீடுகள் செய்து நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு காத்திருப்பது என்பது மக்களை சந்திக்க தயக்கம் என்று பொருள்படும். இந்த சூழ்நிலையில் மக்கள் மன்றத்திற்கு ஒரு வாய்ப்பளித்து மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்ற மனநிலை அனைவருக்கும் வர வேண்டும். 18 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கில் நீதிமன்றத்தை நாடி இழுத்தடிக்க நினைப்பது சில அரசியல் தலைவர்களுக்கு லாபமாக இருக்கலாம். ஆனால் தமிழக மக்களுக்கு நல்லதல்ல.’’

 

சார்ந்த செய்திகள்

Next Story

STR ரசிகர்களுக்குக் கொண்டாட்டமா? ஈஸ்வரன் - விமர்சனம்

Published on 14/01/2021 | Edited on 14/01/2021
eswaran STR

 

தனக்கு ஏற்பட்ட சறுக்கல்களை சரி செய்யும் முனைப்புடன் உடல் இளைத்து, முழு வேகத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, கரோனா காலத்திற்குள்ளேயே படத்தை முடித்து தனது ரசிகர்களுக்கு சிம்பு அளித்த மகிழ்ச்சி படம் பார்த்தபின்பும் தொடர்கிறதா? இயல்பான, தரமான படங்களை தந்து ஆரம்பத்தில் கவனமீர்த்த சுசீந்திரன், சமீபகாலமாக குறுகிய கால - பட்ஜெட் படைப்புகளை கொடுத்து வருகிறார். பட்ஜெட் குறைவது நல்லதுதான், தரமும் குறைந்தால் ஆபத்து.

 

பழனிக்கு அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் பாரதிராஜாவின் மகன்கள் உள்பட குடும்பத்தினர் அனைவரும் அவரை பிரிந்து வசிக்கின்றனர். சிம்பு, பாரதிராஜாவின் பாதுகாவலராக இருக்கிறார். கரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் ஊருக்கு வர குடும்பம் ஒன்று கூடுகிறது. அதே நேரம், வில்லனின் வன்மத்தாலும் ஜோதிட கணிப்பாலும் அந்தக் குடும்பத்துக்கு நேரக்கூடிய ஆபத்திலிருந்து குடும்பத்தை காத்து எதிரிகளை அழித்தாரா சிம்பு என்பதுதான் 'ஈஸ்வரன்' கதை.

 

ஸ்லிம், ஃப்ரெஷ் தோற்றத்தில் ஆட்டம், பாட்டு, அதிரடி... அனைத்திலும் அசத்துகிறார் 'ஆத்மன்' STR. படத்தின் மிகப்பெரிய ஈர்ப்பு அவர்தான் என்றாலும் அந்த ஈர்ப்பு முதல் அரை மணிநேரம்தான். அடுத்து நம்மை அமர வைக்கக்கூடியது திரைக்கதைதானே?சொல்லப்போனால் படத்தில் சிம்புவுக்கு காட்சிகள் சற்றே குறைவு. அவருக்கு மற்றவர்கள் பில்ட் - அப் கொடுத்தாலும் அவர் சற்று அமைதி காத்திருப்பது ஆறுதல். அதேபோல் அவரது டைமிங் வசனங்களும் சிறப்பாக இருக்கின்றன. படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஒருவர் நந்திதா ஸ்வேதா, மற்றொருவர் நிதி அகர்வால். இருவருக்குமே அதிக வேலை இல்லை. மனதில் நிற்கும்படியான கதாபாத்திரமும் இல்லை.

 

str with bharathiraja

 

சிம்புவை காட்டிலும் இயக்குனர் பாரதிராஜாவே அதிக காட்சிகளில் தோன்றுகிறார். அவரின் நடிப்பும், கதாபாத்திரமும், அதன் பின்னணி கதையும் படத்தை தாங்கிப் பிடித்து இருக்கிறது. அதுவே படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. காட்சிக்குக் காட்சி தன் முகபாவனைகள் மூலம் உயிர் கொடுத்துள்ளார். இவரின் இளவயது கதாபாத்திரமாக நடித்திருக்கும் இவரது மகன் மனோஜ், இயல்பாகப் பொருந்தியிருக்கிறார், நடித்திருக்கிறார். பாலசரவணன், முனீஸ்காந்த் ஆகியோரின் நகைச்சுவை சில இடங்களில் ரசிக்கும்படி உள்ளது. காளிவெங்கட், கவனிக்கவைக்கிறார். வில்லன் 'ஸ்டன்' சிவா, மிரட்டலான தோற்றத்தோடு சிறப்பான வில்லனாகக் கூடிய சாத்தியம் இருந்தாலும் அவரது பாத்திரம் அத்தனை அழுத்தமாக இல்லை.

 

ஏற்கனவே பார்த்துப் பழகிய கதை, அரதப்பழசான காட்சி அமைப்பு என பழைய டெம்ப்ளேட்டிலேயே திரைக்கதை அமைத்திருக்கும் சுசீந்திரன் படத்தை வேகமாக முடிப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்தி உள்ளார் என்ற உணர்வு படம் பார்க்கும்போது ஏற்படுகிறது. ஆனாலும் அவரின் அடிப்படை பலமான கிராமத்து வாழ்வியல், குடும்ப உறவுகளுக்கிடையிலான உணர்வுகள், இயல்பான நகைச்சுவை போன்றவை ரசிக்க வைக்கின்றன. கரோனா ஊரடங்கை சரியாகப் பொருத்தியிருப்பது நல்ல யோசனை.

 

திருநாவுக்கரசின் ஒளிப்பதிவில் பாடல்களும், கிராமத்துக் காட்சிகளும் அழகாக இருக்கின்றன. தமனின் இசை மிக வேகமாக இருக்கிறது, வேகமாக நம்மை கடந்து சென்றுவிடுகிறது. பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி, அழுத்தமாக இல்லை. தமிழ் சினிமா கண்ட பல கிராமத்து படங்களின் சாயல்களுடன் உருவாகியுள்ள ’ஈஸ்வரன்’, குடும்பங்களுக்கு ஓகே. STRஐ எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு கொண்டாட்டம் குறைவுதான். 


 

Next Story

"சிம்பு ரசிகர்களுக்கு இது பெரிய விருந்தாக அமையும்" - இயக்குநர் சுசீந்திரன்.

Published on 13/01/2021 | Edited on 13/01/2021
vdsghs

 

நடிகர் சிம்பு நடித்திருக்கும் “ஈஸ்வரன்” படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. கிராமத்து பின்னணியில் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் இப்படத்தை இயக்கியுள்ள இயக்குநர் சுசீந்திரன். ஈஸ்வரன் படம் குறித்து பேசும்போது....


'ஈஸ்வரன்' படத்தின் முதல் பொறி என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் பாதிப்பால் உருவானதுதான். ஒரு முறை, ஜோசியர் ஒருவர் எங்கள் குடும்பத்தில் ஒரு எண்ணிக்கை குறையும் என்று கூறிய சம்பவத்தின் தாக்கம். அதனால் என் குடும்பத்தில் நிகழ்ந்த சம்பவங்கள். அது கதையாக என்னுள் ஈஸ்வரனாக உருவானது. இதை நடிகர் சிம்புவிடம் கதை சொல்ல வாய்ப்பு வந்தபோது , நான் ஒரு பழிவாங்கும் கதையை வைத்திருந்தேன். ஆனால் அவருக்கு பழிவாங்கும் கதை மேல் பெரிய ஈர்ப்பு இல்லை. பிறகு இந்த கதையை சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. இது அவருக்கு ஒரு திருப்புமுனையாக அட்டகாசமான கம்பேக்காக இருக்கும் என நம்பினார். உடனே ஒத்துக்கொண்டார். படப்பிடிப்பில் வெகு சுறுசுறுப்பாக இருந்தார். அவரது ஒத்துழைப்பால் தான் படத்தை வேகமாக முடிக்க முடிந்தது. 

 

இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் இது  எனக்கு நான்காவது படம். அவருடன் பணியாற்றும் போது எப்போதும் பிரம்மிப்பாகவே  இருக்கும். இத்தனை சாதனைகளுக்கு பிறகும் மிகவும் எளிமையாக இருப்பார். என்னுடைய படங்கள் வேகமாக படப்பிடிப்பு முடிவதாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கு காரணம் நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தான். படப்பிடிப்பு என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால்  வேகமாக ஓடிக்கொண்டே இருப்பேன். படத்தின் தரம் குறைய கூடாது என்பது மட்டும் தான் என் குறிக்கோள். ரசிகர்களுக்கு பிடிக்கும்படியான வகையிலும் அதே நேரத்தில் தரத்திலும் சிறந்த படங்களை தர வேண்டும். இந்தப்படம் திரையுலகிற்கு ஒரு புத்துணர்ச்சி தரும். சிம்பு ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக, குடும்பங்களோடு கொண்டாடும் படமாக இருக்கும். இப்படம் தியேட்டரில் பொறி பறக்கும் அனுபவத்தை தரும். படத்தை ரசிகர்கள் ரசிக்க நானும் ஆவலோடு வெளியீட்டிற்காக காத்திருக்கிறேன்" என்றார்.