Skip to main content

தேர்வு எழுதவந்த இஸ்லாமிய பெண்; ஹுஜாப்பை கழட்டச் சொன்ன தேர்வு கண்காணிப்பாளர் 

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

The invigilator says muslim women to remove the hijab in exam hall

 

கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஆண்டு பா.ஜ.க ஆட்சியின் போது, உடுப்பி மாவட்டத்தின் ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பிறகு இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்று, தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது.

 

அதனைத் தொடர்ந்து கர்நாடகா சம்பவத்தை போல் மும்பையில் உள்ள தனியார் கல்லூரியிலும் அரங்கேறியது. அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு மாற்றங்கள் செய்யப்பட்டதாக அந்த கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருந்தது.. இதனால், அங்கு படிக்கும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரத் தடை விதித்திருந்தன. இதையடுத்து, இஸ்லாமிய மாணவிகள் கல்லூரி வாசல் முன் நின்று போராட்டம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

 

இந்த நிலையில்,  திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் இந்தி தேர்வு எழுத வந்த மாணவிகளை ஹிஜாப் அணிய கூடாது என தேர்வு கண்காணிப்பாளர் கூறியதாக சொல்லப்படுகிறது. மத்திய அரசின் அங்கீகாரத்துடன் செயல்பட்டு வரும் தக்‌ஷிணா பாரத் இந்தி பிரச்சார சபா எனும் கல்வி நிறுவனம் ஒன்று சென்னையில் இயங்கி வருகிறது. இந்த சபா தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஆண்டுதோறும் 2 முறை இந்தி தேர்வுகளை நடத்தி அதற்கான சான்றிதழையும் வழங்கி வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் கடந்த 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் முதல் தேர்வான இந்தி பிரவேசிகா தேர்வு நடத்தப்பட்டது. அடுத்த நிலையான பிராதமிக் தேர்வு நேற்று நடந்தது.

 

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்திற்கான தேர்வு மையம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த சோபாசிபாடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வை எழுதுவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், கீழ்பெண்ணாத்தூர், செய்யாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 540 நபர்கள் இந்த பள்ளிக்கு வந்திருந்தனர். அதன்படி இந்தி முதல் தாள் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்வை எழுதுவதற்காக தனியார் பள்ளியில் அரபிக் ஆசிரியராக பணிபுரியும் ஷபானா(30 ) என்ற இஸ்லாமிய பெண் ஹிஜாப் அணிந்து வந்திருந்தார்.  தேர்வு தொடங்கி சுமார் 10 நிமிடங்கள் கடந்த நிலையில் அங்கு அறையை பார்வையிட வந்த தேர்வு கண்காணிப்பாளர், ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதிய ஷபானாவை பார்த்துள்ளார்.

 

மேலும் தேர்வு கண்காணிப்பாளர் ஷபானாவிடம்,  ‘ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதக்கூடாது, ஹிஜாப்பை கழட்டுங்கள்’  என்று கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஷபானா, தேர்வு கண்காணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, ஹிஜாப்பை கழற்ற மறுத்ததாக கூறி அவர் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்.டி.பி.ஐ  மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கட்சியின் நிர்வாகிகள் பள்ளிக்கு சென்று ஷபானா வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இதையடுத்து, திருவண்ணாமலை காவல்துறையினர் விரைந்து வந்து தேர்வு எழுத வந்த ஷபானாவிடமும், பள்ளி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதன் பிறகு ஷபானா தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து தேர்வு எழுத விரும்பவில்லை என்று ஷபானா கூறினார். மேலும், இதனை சட்டபூர்வமாக எதிர்கொள்ள இருப்பதாக எழுதி கொடுத்துவிட்டு ஷபானா தேர்வு மையத்தில் இருந்து வெளியே சென்றார். இந்த சம்பவம் சிறிது நேரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.