
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் பிரச்சாரம், கூட்டணி என பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று (26/2/2021) சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், வாக்கெடுப்பு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைமுறைகளும் அமலுக்கு வந்தது. தற்பொழுது அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
இந்நிலையில் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்து ஆராய வேட்பாளர்களிடம் நேர்காணல் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 2 ஆம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி,நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணல் மார்ச் 2 லிருந்து மார்ச் 6 வரை காலை, மாலை என நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.