
சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு வாயில் அருகே நந்தனார் நுழைந்த வாயில் எனக் கூறப்படும் வாயிலை தீட்சிதர்கள் அடைத்து வைத்துள்ளனர். மேலும் அடைத்து வைத்துள்ள இந்த இடத்தில் மரத்தாலான பெரிய கதவு ஒன்று அமைத்துள்ளனர். நந்தனார் நுழைந்த வாயிலைத் திறக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் புதன்கிழமை இரவு நடராஜர் கோவிலுக்கு வருகை தந்த வாலிபர் ஒருவர் இரும்பு கம்பியால் பூட்டப்பட்டிருந்த நந்தனார் வாயில் கதவின் பூட்டை உடைத்துள்ளார். அதனைப் பார்த்த தீட்சிதர்கள் சிதம்பரம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் கோவிலுக்கு வந்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர் சிதம்பரம் கனக சபை நகரைச் சேர்ந்த ஆனந்த் என்பது தெரிய வந்தது. இவர் நந்தனார் மீது பற்று கொண்டவர் என்றும், இந்த வாயிலைத் தீண்டாமை எனப் பூட்டி உள்ளார்கள். இதனை உடைக்க வேண்டும் எனவும், நடராஜர் எல்லாரையும் காப்பாற்றுகிறார் என்று கூறும் இவர்கள் இந்தக் கோவில் பூட்டை உடைத்தது தவறு என்றால் அவரே என்னைத் தண்டிக்கட்டும் என்றும் பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் இதற்கு வேறு ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தக் கதவுக்கு அருகே பொங்கல் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டுள்ளார் என்றும் தெரிய வருகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பூட்டு உடைக்கப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.