Skip to main content

தற்கொலை செய்த காட்சியை வாட்ஸ் அப்பில் அனுப்பிய வாலிபர்

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

 

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த ஈருடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 30). இவருக்கும் மங்கலம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
 

வேலை நிமித்தமாக ஆரோக்கியராஜ் வெளியூர்கள் சென்றபோது, இன்னொரு பெண்ணுடன் பழகியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தகவல் தெரிந்ததும், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த அந்த பெண், கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

 

relatives


 

மனைவி எதற்காக பிரிந்து வாழ்கிறார் என்று அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது. இதனால் ஆரோக்கியராஜ் கடந்த சில நாட்களாக மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் அவர் தனது செல்போனில் வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். 


 

அதில், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியபடி தான் வாங்கி வைத்திருந்த விஷத்தை மதுவுடன் கலந்து குடிக்கும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும் அந்த வீடியோ பதிவை தனது உறவினர் ஒருவரின் வாட்ஸ்-அப்பிற்கு ஆரோக்கியராஜ் அனுப்பினார். வாட்ஸ்-அப் காட்சியை பார்த்த உறவினர் அதிர்ச்சியடைந்து, உடனடியாக தனக்கு வந்த வீடியோ குறித்து ஆரோக்கியராஜ் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.


 

தகவல் அறிந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டில் உள்ள அறையில் போய் பார்த்துள்ளனர். அங்கு மயங்கி கிடந்த ஆரோக்கியராஜை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் மூங்கில் துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்