Skip to main content

விஸ்வரூபம் எடுக்கும் சேலம் சிறுமிகள் பாலியல் விவகாரம்: மேலும் ஒருவர் 'அத்துமீறிய' கொடூரம்!

Published on 21/11/2020 | Edited on 22/11/2020

 

incident in salem

 

பேய் ஓட்டுவதாகக் கூறி, சேலத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை மந்திரவாதி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், அச்சிறுமிகளை மாட்டுத்தீவன விற்பனையாளர் ஒருவரும் பல மாதங்களாகப் பாலியல் பலாத்காரம் செய்து வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 15 மற்றும் 12 வயதுகளில் இரண்டு மகள்கள் உள்ளனர். கரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்ததால் அவர்கள் லேசாக மனநலம் பாதித்தவர்கள் போல் இருந்தனர்.

இதையடுத்து, அவர்களுக்கு நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தைச் சேர்ந்த மந்திரவாதி சேகர் என்பவரிடம், தாயத்து மந்திரித்து கட்டி வருவதற்காக, கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுமிகளைப் பெற்றோர் அழைத்துச் சென்றனர். அந்தச் சிறுமிகளுக்குப் பேய் பிடித்து இருப்பதாகவும், அவர்களுக்குச் சில நாட்கள், இரவில் பூஜைகள் செய்து பேய் ஓட்ட வேண்டியது இருக்கிறது என்றும் மந்திரவாதி கூறியுள்ளார். இதனால் சிறுமிகளை அங்கேய விட்டுச் சென்றுள்ளனர் பெற்றோர்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அவர், சிறுமிகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் மங்களபுரம் காவல்துறையினர் சேகரை கைது செய்தனர். காவல்துறையின் தீவிர விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரையும் சேலம் மாவட்டம் சுக்கம்பட்டியைச் சேர்ந்த நபர் ஒருவரும் பல மாதங்களாகவே பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ள அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளன.

இதற்கிடையே அந்தச் சிறுமிகளின் பெற்றோர், சேலம் வீராணம் காவல் நிலையத்தில், சனிக்கிழமை (நவ. 21) ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, வாழப்பாடியில் இருந்த எங்களை சேலம் சுக்கம்பட்டியில் மாட்டுத்தீவனம் விற்பனை செய்து வரும் ரவீந்திரன் என்பவர் வேலைக்காக அழைத்து வந்தார். எங்கள் மகள்கள் இருவரையும் பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதாகவும், அதனால் குடும்பத்துடன் சுக்கம்பட்டியில் தங்கியிருந்து வேலை செய்யும்படியும் கூறினார். அதன்பேரில் நாங்கள் குடும்பத்துடன் சுக்கம்பட்டிக்கு வந்தோம்.

அவர் கூறியபடியே எங்கள் மகள்களை அங்குள்ள அரசுப் பள்ளியில் சேர்த்தார். இந்த நிலையில், கரோனா காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டதால், கடந்த 8 மாதங்களாக ரவீந்திரன் தன்னுடைய வீட்டு வேலைகளைச் செய்வதற்காக எங்கள் மகள்களை அழைத்துக் கொண்டார். அப்போது அவர், எங்கள் குழந்தைகளைப் பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதில் எங்கள் மகள்கள் கர்ப்பம் அடைந்துள்ளனர். கருவைக் கலைப்பதற்காகவும் அவர் மாத்திரைகள் வாங்கிக் கொடுத்துள்ளார்.

 

cnc


இந்த நிலையில், நாங்கள் மீண்டும் சொந்த ஊருக்கே செல்ல முடிவு செய்தோம். அப்போது ரவீந்திரன், சமையல் வேலைகள் செய்வதற்கு ஆள் தேவை என்று கூறி எங்கள் இரண்டாவது மகளை தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டார். அப்போதும் அவர் எங்கள் மகளிடம் பலமுறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை விசாரித்துக் கைது செய்ய வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

சேலத்தில், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது. மகள்களைப் பெற்ற பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்