Skip to main content

கிணற்றில் சடலமாக மிதந்த பெண் உடல்... போலீசார் விசாரணை!

Published on 24/04/2022 | Edited on 24/04/2022

  

incident in cuddalore police investigation

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ளது மேல் ஆதனூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜாதா(32). கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் சுஜாதாவிற்கு திருமணம் நடந்துள்ளது. இதில் இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பூர் அருகில் உள்ள பில்லூர் பகுதியில் ஒருவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து அங்கேயே தங்கி விவசாயம் செய்து வந்தனர் இவர்கள் இருவரும். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி தேதி சுஜாதா வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வந்து சேரவில்லை. மனைவி சுஜாதா காணாமல் போனதால் அவரை வெங்கடேசன் பல்வேறு இடங்களிலும், உறவினர் வீடுகளிலும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

 

இதையடுத்து அவர் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று காலை 8 மணி அளவில் வெங்கடேசன் தனது குத்தகை நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது அங்குள்ள பாசன கிணற்றில் சுஜாதா இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து வெங்கடேசன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சுஜாதா உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுஜாதாவின் தாய் வளர்மதி, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரது இறப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் சடலமாக மிகுந்த சுஜாதாவின் இறப்பில் மர்மம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்