
சிதம்பரம் அருகே உள்ள சக்திவளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ்( 45). விவசாயி. இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் ஸ்ரீதர் (24) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக 2 பேரின் குடும்பத்தினரும் அடிக்கடி தகராறு செய்து கொள்வார்கள். இதனால் அவர்களிடம் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு ராமதாஸ் அந்த பகுதியில் உள்ள காளியம்மன்கோவில் அருகே அவரது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீதர், அவரது தந்தை பரமசிவம்(55), அதே பகுதியைச் சேர்ந்த மகாராஜன்(65) ஆகியோர் அங்குச் சென்றனர்.
இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு நடந்தது. அங்கிருந்தவர்கள் அவர்களைச் சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். தொடர்ந்து அதே இடத்தில் ராமதாஸ் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீதர் அவரது டிராக்டரை அங்கு ஓட்டிவந்து ராமதாஸ் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த ராமதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஒரத்தூர் போலீஸாருக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் ராமதாஸ் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீஸார் இது குறித்து ஸ்ரீதர், அவரது தந்தை பரமசிவம் மற்றும் மகாராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.