ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை
பட்டாசுகளை ரயிலில் எடுத்து செல்ல கூடாது என அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ரயில்களில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை எடுத்து செல்லக் கூடாது. மீறி எடுத்து சென்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பயணிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே பாதுகாப்பு படையினர் கூறுகையில், “இந்திய ரயில்வே சட்டம் 164வது பிரிவின் படி, ரயில்களில் பட்டாசு, பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட இதர வெடிபொருட்களையும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களையும் எடுத்து செல்வது குற்றச்செயலாகும். இந்த சட்டத்தின்படி அதிகபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனையும், ₹3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். விதிமுறையை மீறி பட்டாசு கொண்டு செல்லப்படுவது கண்டறிப்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.