
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி கடந்த 2018ஆம் ஆண்டு அரியலூர் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகே அமைச்சர் சிவசங்கர் போராட்டம் நடத்தியிருந்தார். இதனையடுத்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அமைச்சர் சிவசங்கர் மீது அரியலூர் போலீசார் 2 வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர். மேலும் கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பிரச்சாரம் செய்ததாகவும் அமைச்சர் சிவசங்கர் மீது தேர்தல் விதி மீறல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான 3 வழக்குகளும் அரியலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

இதனையடுத்து இந்த 3 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி அமைச்சர் சிவசங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை கடந்த 17ஆம் தேதி விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், சிவசங்கர் மீதான 3 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார். இதற்கிடையே கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது விதிகளை மீறியதாக அமைச்சர் பெரிய கருப்பன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரியகருப்பன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அமைச்சர் பெரியகருப்பன் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.
மேலும் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் போது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். அப்போது மார்ச் 27ஆம் தேதி (27.03.2021) கருங்குளம் மற்றும் கோழிபத்தி கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அச்சமயத்தில் தேர்தல் விதிகளை மீறி கொடிக் கம்பங்களை நட்டும், தோரணங்களைக் கட்டியும் பிரச்சாரம் செய்ததாகவும், அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது பேரையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதோடு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திமுக வேட்பாளர் தமிழரசியை ஆதரித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தேர்தல் விதிகளை மீறி 15 வாகனங்களில் பிரச்சாரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான இரு வழக்குகள் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனை எதிர்த்து அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்குகள் நீதிபதி இளந்திரையன் அமர்வில் இன்று (21.03.2025) விசாரணை நடைபெற்றது.

அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் வாதிடுகையில், “ஒருவழக்கில் அதிகபட்சமாக ஒரு ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்க முடியும். மற்றொரு வழக்கில் அபராதம் மட்டுமே விதிக்கப்படும். மூன்றாண்டுகள் தாமதமாக இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை எற்றுகொண்ட நீதிபதி இளந்திரையன் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான 2 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். அதே போன்று திருச்சி திமுக எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜுக்கு எதிரான கொரோனா விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.

அதே போன்று கடந்த 2018ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தடையை மீறி போராட்டம் நடத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ. ராசா எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆ. ராசா சார்பில் வாதிடுககையில், “அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தொடரப்பட்ட வழக்கு என்பதால் இதனை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் அரியலூரில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அமைச்ச்சர் சிவசங்கருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை தர வேண்டாம் எனவே அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது அபராதம் விதிக்கலாம்” என யோசனை தெரிவித்துள்ளது.