
மறைந்த திமுக தலைவர் கலைஞரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் டி.ராஜேந்தர் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், ’’நான் பரம்பரை திமுககாரன். கலைஞரை என் தலைவராக ஏற்றுக்கொண்டவன். கலைஞரை தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தேன். இன்றைக்கு என் தலைவரோட முகத்தை பார்க்க வந்தேன். இதே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலிக்கு வந்தபோது அவ்வளவு தடைகள் இருந்தது. அதையெல்லாம் நான் தாங்கிக்கொண்டேன். ஆனால் என் தலைவனை பார்க்க வந்தபோது இந்த காவல்துறை எனக்கு இவ்வளவு தடையா போடும்.

நான் திமுகவின் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர், திமுகவின் கொள்கை பிரச்சார பீரங்கி, கலைஞரால் என்னில் பாதி என்று அழைக்கப்பட்டவன். கலைஞரால் பூங்கா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆக்கப்பட்டவன். மாநில சிறுசேமிப்பு துறையின் துணை தலைவராக இருந்த எனக்கே இந்த கதி. காவல்துறையிடம் நான் ஒன்று மட்டும் பதிவு செய்தேன். நான் வண்டியை வேண்டுமானால் எடுத்துக்கொண்டு திரும்பி சென்றுவிடுகிறேன். என் தலைவனுக்காக எத்தனை கிலோமீட்டர் வேண்டுமானால் நடப்பேன். அது பரவாயில்லை. ஆனால், என்னை இவ்வளவு நேரம் காக்க வைக்கிறீர்களே இது என்ன நியாயம்?

நான் திரையில் நடிப்பேன். தரையில் நடிக்க மாட்டேன். இரவெல்லாம் என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கிறது. என்னை எப்படி எல்லாம் வளர்த்தார்; எப்படி எல்லாம் ஆளாக்கினார் என்று நினைத்து நினைத்து பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அவர் எனக்கு தலைவன் மட்டுல்ல; தகப்பன் மாதிரி. அவருக்கு நான் பெத்த பிள்ளை இல்லை. தத்துப்பிள்ளை மாதிரி.
என்னிடம் இன்று கம்பீரம் இல்லை. நான் மைக்கை பிடித்ததே என் தலைவரைப்போல் பேசவேண்டும் என்று ஆசைப்பட்டுத்தான்....’’ நா தழுதழுத்தார்.