கட்டிடக் கட்டுமான பொருட்களின் ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க கோரி ஈரோட்டில் நடந்த கட்டிட பொருட்கள் விற்பனையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட கட்டிடப் பொருட்கள் விற்பனையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அச்சங்க தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் நாராயணசாமி, செயலாளர் பாலு என்ற தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சின்னச்சாமி நிதிநிலை அறிக்கை சமர்பித்தார். ஆண்டறிக்கையை இணை செயலாளர் குமார் சமர்பித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார், கதைக்களம் நிறுவனர் வனிதாமணி அருள்வேல் வணிகமும், குடும்பமும் என்ற தலைப்பில் பேசினார்.
இந்த கூட்டத்தில், கட்டிடக் கட்டுமான பொருட்களின் மீது பல்வேறு சதவீதமான ஜிஎஸ்டி வரியை, ஒரே மாதிரியாக 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மேட்டூர் சாலையில் 5க்கும் மேற்பட்ட திரையங்குகள் உள்ளதால் கூட்ட நெரிசல், வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரித்து செல்கிறது. எனவே, மேட்டூர் சாலையில் கனரக வாகனங்களுக்கு ஒரு வழிப்பாதையாகவும், இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் இரு வழிப்பாதையாக மாற்றிட மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு சோலாரில் அமைய உள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதேபோல், கனிராவுத்தர் குளத்தின் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.