Skip to main content

மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு

Published on 08/05/2018 | Edited on 08/05/2018
river

 

மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மணல் கடத்தல் வழக்கில் கிருஷ்ணகிரி  மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் பாபு என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த  உத்தரவை  ரத்து செய்யக்கோரி அவரது மனைவி வேடியம்மாள் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நீதிபதி எஸ். ராமதிலகம் அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, லஞ்சம் பெற்றுக் கொண்டு மணல் கடத்தலை அனுமதிக்கும்  வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர். 

 

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் 2010 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை நீதிமன்ற பார்வைக்கு மட்டும் தாக்கல் செய்யப்பட்டது. 

 

அந்த அறிக்கையில் " மணல் கடத்தலை அனுமதித்து முறைகேட்டில் ஈடுபட்ட  அரசு அதிகாரிகள் மீது 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவர் லஞ்சம் கொடுக்கும் போது பிடிபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், மணல்  கடத்தல் விவகாரத்தில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் சட்டத்தை மீறாமலும் பொதுமக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லாத வகையில் இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு ஊழியர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை  எடுக்க அதிகாரம் இருந்தும்  ஒருவர் மீது கூட குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர்.

 

மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

 

மேலும் அரசு அதிகாரிகள் மணல் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென  உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு 4 வாரத்தில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். 

 

 சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

 

லாரி ஓட்டுனர் பாபு மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தின் மீதான நடைமுறைகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், அதனடிப்படையில் பாபு மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

மணல் தேவையை பூர்த்தி செய்ய என்எல்சி நிறுவனம் புதிய திட்டம் தொடக்கம்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
 NLC Company launches new project to meet sand demand

நெய்வேலியில் உள்ள சுரங்கம்-1 அ பகுதியில், பழுப்பு நிலக்கரி வெட்டி எடுப்பதற்காக நீக்கப்படும் மேல் மண்ணிலிருந்து, ‘எம்-சாண்ட்’ (M-Sand) எனப்படும் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படும் மணல் தயாரிக்கும் ஆலை அமைப்பதற்கான பூமி பூஜை, நடைபெற்றது. இதில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவரும் மற்றும் மேலாண் இயக்குநருமான பிரசன்னகுமார் மோட்டுபள்ளி தலைமை தாங்கி பணியை துவக்கி வைத்தார்.

நிலக்கரி அமைச்சகத்தின் பசுமை முன் முயற்சிகளுக்கு இணங்க, இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்காகவும், சுற்றுச்சூழல் மற்றும் நதி சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்காகவும், “கழிவிலிருந்து வளம்” என்ற கருத்தை நடைமுறைப்படுத்திட இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

இது போன்ற, பசுமை முயற்சிகளை செயல்படுத்தும் நடவடிக்கைகளில் என்எல்சி இந்தியா நிறுவனம் எப்போதும் ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆலையானது, சுரங்கத்தில், மேல்மண் நீக்கத்தில் இருந்து பெறப்படும் மண்ணில் இருந்து, ஆண்டுக்கு 2.62 லட்சம் கன மீட்டர், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படும் தரமான ‘எம்சாண்ட்’ என்ற மணலை உற்பத்தி செய்யும். மேலும், வருகின்ற 2024 ஜனவரி மாத இறுதிக்குள் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம், தற்போதைய அதிகபட்ச மணல் தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன், இயற்கை வளமான மணல், அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுவது குறையும் என்றும் கருதப்படுகிறது. மேலும் நெய்வேலியில் உள்ள இதர சுரங்கங்களான, சுரங்கம்-1 மற்றும் சுரங்கம்-2 ஆகியவற்றிலும் இதே போன்று மற்றும் இதைவிட அதிகத் திறன் கொண்ட மணல் ஆலைகள், விரைவில் நிறுவப்படும் என்று நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத் தலைவர், இந்த ஆலையை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது என்றும், இது போன்ற சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும், பசுமை முயற்சிகள் வருங்காலங்களில், நிறுவனத்தில் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.

இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில், நிறுவனத் தலைவர் அவர்களுடன் நிறுவன நிர்வாக இயக்குநர்கள், செயல் இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story

மணல் லாரிகளை எம்.எல்.ஏ மிரட்டுகிறார்; மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Truck Owners Association President alleges that MLA  threatening sand trucks

 

வேலூர் மாவட்டம் கந்தநேரியில் உள்ள அரசு மணல் கிடங்கில் இருக்கும் ஆற்று மணலை முறையாக ஆன்லைன் மூலம் பதிவு செய்து மணல் எடுக்க அனுமதிக்கப்பட்ட லாரிகளுக்கு 3 தினங்களுக்கு மேலாக மணல் கொடுக்காமல் காத்துக் கிடக்க வைத்துவிட்டு, மணல் எடுக்க பதிவு செய்யாத லாரிகளுக்கு இரவு பகலாக கள்ளத்தனமாக அரசு அதிகாரிகளின் துணையோடு, லோடு லோடாக மணல் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்து முறையாகப் பதிவு செய்த லாரிகளுக்கு மணல் வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் மனு அளித்தனர்.

 

Truck Owners Association alleges that MLA  threatening sand trucks

 

அதன் பின்னர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் நிலவி வரும் ஆற்று மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்திக் கொண்டு வேலூர் கந்தனேரி மணல் குவாரியில் திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரும், ஒன்றிய கவுன்சிலரும் சேர்ந்து உள்ளூர் ரவுடிகளை வைத்துக் கொண்டும் அரசு அதிகாரிகளோடு கைகோர்த்துக் கொண்டும், ஆன்லைன் மூலம் பதிவு செய்த லாரிகள் வாரக்கணக்கில் நின்று கொண்டிருக்க, இரவு நேரங்களில் சட்ட விரோதமாக அனுமதி பெறாத லாரிகளில் டன் கணக்கில் மணல் கடத்துகிறார்கள். 

 

ஆகவே இதுபோன்று அநீதி இழைப்பதை தடுத்து நிறுத்தி, ஆன்லைன் மூலம் பதிவு செய்து மணல் எடுக்க காத்துக் கொண்டிருக்கும் லாரிகளுக்கு காவல்துறை முன்னிலையில் மணல் வழங்கிட வேண்டும். அதேபோன்று மணல் கடத்தலில் ஈடுபடும் உள்ளூர் குண்டர்களுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கிடங்கில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தனர்.