Skip to main content

ஒரு லட்சம் லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி; கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

A government official who asked for a bribe of one lakh! Anti-bribery department caught
செந்தில்குமார்

 

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள செங்கராயன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சச்சிதானந்தம். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று 1974 ஆண்டு வரை அவரது பெயரில் பட்டாவாக இருந்துள்ளது. அதன் பிறகு வருவாய்த் துறையினரின் குளறுபடியால் சச்சிதானந்தத்தின் நிலத்தை அரசின் தரிசு புறம்போக்கு நிலம் என்று ஆவணத்தை மாற்றி உள்ளனர்.

 

சமீபத்தில் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று தன் பெயருக்கு சிட்டா அடங்கல் தருமாறு கேட்டுள்ளார். அப்போதுதான் அவரது நிலம் அரசு தரிசு புறம்போக்காக மாற்றப்பட்டுள்ளது என்பது சச்சிதானந்தத்திற்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சச்சிதானந்தம், அந்த சொத்தின் மூல ஆவணங்களை ஆதாரங்களாக காட்டி மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியிடம் தனக்கு சொந்தமான நிலத்தை அரசு தரிசாக மாற்றப்பட்டுள்ளது அதை மீண்டும் தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு மனு அளித்துள்ளார். அவரது மனுவை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் விசாரணை செய்து அவரது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு பரிந்துரை செய்துள்ளார். 

 

இந்த பரிந்துரை கடிதம் ஏலாக்குறிச்சி பகுதி கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோரிடம் வந்து சேர்ந்து. அவர்கள் இருவரும் விவசாயி சச்சிதானந்தத்திற்கு தகவல் அளித்து விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் தங்கள் அலுவலகத்திற்கு வந்து தங்களை சந்திக்குமாறு தகவல் அனுப்பி வரவழைத்துள்ளனர். அதன்படி சச்சிதானந்தம் நிலம் தனக்கு சொந்தமானது என்பதற்கு ஆதாரமான பத்திரம் மற்றும் ஆவணங்களை எடுத்துக்கொண்டு வருவாய் ஆய்வாளர் செந்தில்குமாரை ஏலாக்குறிச்சியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்துள்ளார். 

 

அங்கே கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜனும், செந்தில்குமாரும் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும், சச்சிதானந்தம் பெயருக்கு அவரது நிலத்தை மீண்டும் பட்டா மாற்றம் செய்து தர தங்களுக்கும் அலுவலக செலவுக்கும் என ஒரு லட்ச ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சச்சிதானந்தம், இது குறித்து அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அவரிடம் விசாரணை செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதன் பிறகு சச்சிதானத்திற்கு ஆலோசனை வழங்கினர். 

 

அதில், ஒரு லட்ச ரூபாய் லஞ்சமாக பணம் தருவதாக ஒப்புக்கொள்ள செய்து அதற்கு முதல் தவணையாக 20,000 ரூபாய் பணத்தைக் கொண்டு போய் கொடுக்குமாறு சச்சிதானந்திடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பணத்தில் ரசாயன பவுடர் தடவி கொடுத்து அனுப்பி உள்ளனர். அதன்படி நேற்று ஏலாக்குறிச்சியில் உள்ள வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் அலுவலகத்திற்கு சென்ற சச்சிதானந்தம், ஆய்வாளர் செந்தில்குமாரிடம் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அவரது அருகிலேயே கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் உடன் இருந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சந்திரசேகர் தலைமையிலான போலீசார் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்டம் விட்டு மாவட்டம் தாவும் சிறுத்தை; இரவு பகலாகத் தேடும் வனத்துறை - மிரட்சியில் மக்கள்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People are afraid because of movement of leopards in Ariyalur

கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த செய்தியால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. இதனையடுத்து, தற்போது அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர். இதனால் செந்துரையைச் சுற்றிலும் உள்ள கிராம மக்கள் பயத்திலும் அதிர்ச்சியிலும் தூக்கம் இன்றி தவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்(11.4.2024) இரவு செந்துறை அரசு மருத்துவமனை பகுதியில் சிறுத்தை புகுந்ததை பூங்கோதை என்ற பெண்மணி உட்பட சிலர் நேரில் பார்த்துள்ளனர். பயந்து மிரண்டு போன அவர்கள் உடனடியாக செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல்துறை தீயணைப்புத்துறை பொதுமக்களும் அங்கு திரண்டனர். காவல்துறையினர் மருத்துவமனை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மருத்துவமனை சாலையில் குறுக்கே சிறுத்தை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து சிறுத்தையைத் தேட தொடங்கினர்.

People are afraid because of movement of leopards in Ariyalur

அப்போது ஒரு வெல்டிங் பட்டறை அருகே சிறுத்தை பதுங்கி இருந்ததை இளைஞர்கள் கண்டனர். அவர்கள் சிறுத்தையை விரட்ட சிறுத்தை அங்கிருந்து ஏந்தல் என்ற ஏரிக்குள் பாய்ந்து சென்று மறைந்துள்ளது. பின்னர் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், அந்தச் சிறுத்தை செந்துறை அருகில் உள்ள உஞ்சினி, பொன்பரப்பி, சிதலவாடி, பகுதிகளில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காடுகளுக்குள் புகுந்து பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கோவை மாவட்டம் வால்பாறை மலை காடுகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட வனத்துறையினரை செந்துறை வரவழைத்தனர். அவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிவதில் நிபுணர்கள் என்று கூறப்படுகிறது.

People are afraid because of movement of leopards in Ariyalur

இதையடுத்து அரியலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலமும் அப்பகுதியில் உள்ள ஓடை பகுதியில்  கண்காணித்ததோடு, சில இடங்களில் கூண்டு வைத்து அந்தக் கூண்டுக்குள் ஆடுகளை விட்டு சிறுத்தையை வரவழைத்து பிடிப்பதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது செந்துறைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது. நின்னையூர், பகுதியில் சிறுத்தையின் காலடித்தடம் பதிந்துள்ளது.

மேலும் செந்துறை பகுதியில் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளது. மயிலாடுதுறை பகுதியில் நடமாடிய சிறுத்தை அங்கிருந்து காடுகள் அதை ஒட்டி உள்ள ஓடை பகுதிகள் வழியாக செந்துறை பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும், மேலும் அது அங்கிருந்து காடுகள் மற்றும் ஓடை வழியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சை மலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு. அந்தச் சிறுத்தை இதுவரை விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளையோ நாய்களையோ அடித்து உணவாக சாப்பிட்டதாக தகவல் இல்லை. அதன் வழிப்போக்கில் கிடைக்கின்ற உணவை சாப்பிட்டு சென்று கொண்டிருக்கிறது.

சிறுத்தையை பிடிக்கும் பணியில் தஞ்சாவூர் ,கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சிறுத்தை நடமாட்ட அச்சத்தினால் செந்துறைப்பதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

People are afraid because of movement of leopards in Ariyalur

சிறுத்தை பிடிபடுமா? தப்பி செல்லுமா? என்று மக்கள் பதைபதைப்புடன் கிராமப்புறங்களில் பேசிக் கொள்கிறார்கள். இதனால் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட கிராமங்களில் மக்கள் நடமாட்டம் இரவு நேரங்களில் குறைந்து காணப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம், சிறுத்தை நடமாட்டத்தினால் ஏற்பட்ட பரபரப்பு மறுபக்கம் என மக்கள் மிரண்டு போய் கிடக்கிறார்கள்.

Next Story

'இரவில் வெளியே வர வேண்டாம்'-அரியலூர் மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 'Don't come out at night'-Admonition to people of Ariyalur

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ரஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வனத்துறை மருத்துவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், அரியலூர் மாவட்டத்தில் நடமாடும் சிறுத்தை, எலி, தவளை, நத்தை, மான், மயில் உள்ளிட்ட பறவைகளை  உண்ணக்கூடியது. இந்த நடமாடும் சிறுத்தைக்கு மற்ற உயிரினங்களைத் தாக்கும் எண்ணம் இல்லை. வளர்ப்பு பிராணிகளைச் சீண்டாத சிறுத்தை மனிதர்களிடம் பயந்த சுபாவம் கொண்டிருக்கும். அரியலூரில் நடமாடும் சிறுத்தை ஏலகிரி மலைக்கோ அல்லது அருகில் உள்ள பச்சை மலைக்கோ செல்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.