Skip to main content

செய்வினை எடுப்பதாக தங்கச் சங்கிலி அபேஸ்; முதியவரை தேடும் போலீசார்

Published on 17/12/2023 | Edited on 17/12/2023
The gold chain is taken as an black magic; Police looking for old man

'உங்க வீட்டுக்கு உங்க உறவினர்களே செய்வினை வச்சுட்டாங்க. உடனே எடுக்கலனா துர் சம்பவங்கள் நடக்கும், அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படும்' என்று வீட்டு வாசலில் வெள்ளை வேட்டி சட்டையோடு நின்று சொன்ன 70 வயது முதியவர் அந்த வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடும்  சம்பவங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கத் தொடங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் காவல் சரகம் மேற்பனைக்காடு பேருந்து நிறுத்தத்தில் டவுன் பஸ்ஸில் இறங்கி மேற்கு நோக்கி நடக்க 100 மீ தூரத்தில் உள்ள ஒரு வீட்டு வாசலில் நின்று 'இந்த வீட்ல செய்வினை இருக்கு. இந்த வீட்டு சொந்தக்காரங்களே செய்வினை வச்சு உங்களை கொல்லப் போறாங்க உடனே எடுக்கனும்' என்று வெள்ளை வேட்டி சட்டையில் வந்த 70 வயது முதியவர் ஒருவர் சொல்லியுள்ளார்.

பயத்தின் உச்சத்திற்கே போன அந்த வீட்டுக்காரர் முதியவரிடம் இறங்கி வந்து பேச, இப்பவே பூஜையை ஆரம்பிக்கனும். 3 நாள் பூஜை செஞ்சு உனக்கு வச்ச செய்வினையை எடுக்கனும். அப்பதான் இந்த குடும்பத்துக்கு நல்லது நடக்கும் என்று முதியவர் சொல்ல அன்றே தொடங்கியது பூஜை. இந்த பூஜை முடிஞ்சு செய்வினை எடுக்கும் வரை யார்கிட்டயும் சொல்லக்கூடாது என்று சத்தியம் வேறு வாங்கிக் கொண்டார்.

3 வது நாள் பூஜை நடக்கும் போது தண்ணீரில் விபூதி என எதையோ போட தண்ணீர் சிவப்பானது. செய்வினை அதிகமா இருக்கு அதுக்கு வேற பரிகாரம் செஞ்சுதான் எடுக்கனும் வீட்டில்  இருந்து 7 புடவைகளை எடுத்து நான் சொல்லச் சொல்ல ஒவ்வொன்னா மடித்து அடுக்கி வைங்க என்று சொல்லிக் கொண்டே போனவர், ஒரு கட்டத்தில் தங்கச் சங்கிலியை அந்த புடவைக்குள் வச்சு கட்டுங்க என்று சொல்லியுள்ளார். சொன்னதை அப்படியே செய்துள்ளனர். 3 நாளைக்கு இந்த புடவை கட்டை அவிழ்க்க கூடாது.

இப்ப இந்த துண்டை இடுப்பில் கட்டுங்க என்று ஒரு துண்டு கொடுக்க, அந்த துண்டில் நெருப்பு தீ எரிய அய்யய்யோ செய்வினையின் வேகம் இன்னும் அதிகமாகுது இந்த துண்டை அவிழ்த்து விடாதீங்க இப்பவே கீரமங்கலம் சிவன் கோவில் போய் சிவனை வழிபட்டு ஒரு பூஜை பண்ணனும் அப்பதான் எல்லாம் சரியாகும். நீங்க சிவன் கோயில் போங்க நான் வேற ஒரு இடத்துக்கு போயிட்டு அங்கே வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு சென்ற முதியவர் பல நாட்களாக காணவில்லை.

3 நாட்கள் கழித்து புடவை கட்டை அவிழ்த்து பார்க்க உள்ளே வைத்த 3 பவுன் தங்கச் சங்கிலியையும் காணவில்லை. மாறாக ஒரு கல் மட்டும் இருந்தது. அதன் பிறகே தான் முதியவரால் ஏமாற்றப்பட்டது தெரிய வந்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பார்க்க முதியவரின் படம் பதிவாகி உள்ளது. இதே ஊரில் புதுக்குடியிருப்பு பகுதிக்கும் அந்த முதியவர் சென்றுள்ளார். கடந்த மாதம் இதே முதியவர் அன்னவாசல் பகுதியில் ஒரு குடும்பத்தை ஏமாற்றி நகைகளை திருடிக் கொண்டு சென்றதும் தெரியவந்துள்ளது.

எல்லா ஊரிலும் சிசிடிவி கேமராவில் அந்த முதியவரின் உருவம் பதிவாகி இருந்தாலும் கூட இதுவரை அவரை அடையாளம் கண்டு கைது செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர் புதுக்கோட்டை போலீசார். எவ்வளவோ அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும் கூட இன்னும் பில்லி, சூனியம், செய்வினை என்று மக்கள் ஏமாறுவதும் குறையவில்லை. இதனை முதியவர்கள் கூட பயன்படுத்தி ஆட்டையை போடுகிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.