Skip to main content

கோகுல்ராஜ் கொலை வழக்கு:  'அந்தர்பல்டி' சுவாதி மீது சிபிசிஐடி புதிய வழக்கு!

Published on 02/10/2018 | Edited on 04/10/2018
govt

கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதி திடீரென்று பிறழ் சாட்சியமானதால் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி, நாமக்கல் சிபிசிஐடி போலீசார் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று (அக். 1, 2018) மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

 


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் மனைவி சித்ரா. இவர்களுடைய மகன் கோகுல்ராஜ் (23). திருச்செங்கோட்டில் உள்ள கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார். 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படிப்பை நிறைவு செய்தார்.


கல்லூரியில் உடன் படித்து வந்த, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்தை கிராமத்தைச் சேர்ந்த சுவாதியும் கோகுல்ராஜும் நெருங்கிப் பழகி வந்தனர். கல்லூரி படிப்பு முடிந்த பிறகும் அவர்களின் நட்பு தொடர்ந்து வந்த நிலையில், 23.6.2015ம் தேதியன்று இருவரும் ஒன்றாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டனர்.

 


அன்று இரவு வெகுநேரமாகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், பல இடங்களிலும் விசாரித்தனர். மறுநாள் காலையில் சுவாதியிடமும், மற்றொரு கல்லூரித் தோழர் கார்த்திக்ராஜாவிடம் விசாரித்த கோகுல்ராஜின் தாயார் சித்ரா, அண்ணன் கலைச்செல்வன் ஆகியோர் கோகுல்ராஜை ஒரு கும்பல் கடத்திச் சென்றிருப்பதை அறிந்தனர். 

 


சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 7 பேர் கும்பல் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் தனிமையில் பேசிக்கொண்டிருந்த சுவாதியையும், கோகுல்ராஜையும் மிரட்டியுள்ளனர். பின்னர் அந்த கும்பல் கோகுல்ராஜை மட்டும் மிரட்டி காரில் கடத்திச்சென்றுவிட்டதாக போலீசாரிடம் சுவாதி வாக்குமூலம் அளித்து இருந்தார். 24.6.2015ம் தேதி மாலை நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது.


திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் கோகுல்ராஜையும், சுவாதியையும் யுவராஜூம் அவருடைய கூட்டாளிகளும் மிரட்டும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த காட்சிகளை வைத்துதான் போலீசார் யுவராஜ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் உள்பட 17 பேரை கைது செய்தனர். 


இந்த வழக்கில் சாட்சிகள் மீதான விசாரணை கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச். இளவழகன் முன்னிலையில் நடந்து வருகிறது. கடைசியாக கோகுல்ராஜை யார் கடத்திச்சென்றனர் என்பதற்கான ஓரே நேரடி சாட்சி, சுவாதி மட்டும்தான். அவர் இந்த வழக்கில் அரசுத்தரப்பில் நான்காவது சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.


தொடக்கத்தில் இந்த வழக்கை திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் குற்ற விசாரணைமுறை சட்டம் பிரிவு 164ன் கீழ், நாமக்கல் ஜேஎம்&2 நீதிமன்றத்தில் முன்பே சுவாதி சாட்சியம் அளித்திருந்தார். அப்போது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள், வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜின் கூட்டாளியும் கார் ஓட்டுநருமான அருண் என்பவரை அடையாள அணிவகுப்பின்போது அடையாளம் காட்டியது ஆகிய தகவல்களை வாக்குமூலமாக அளித்திருந்தார். 


இதனால் சாட்சிகள் விசாரணையின்போதும் சுவாதி மீது அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி மற்றும் சிபிசிஐடி போலீசார் அதீத நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், கடந்த செப்டம்பர் 10, 2018ம் தேதி சாட்சியம் அளிக்க வந்த சுவாதியிடம், சம்பவத்தன்று அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் நீதிமன்றத்தில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.


அதில் வரும் நபர்கள் யாரென்றே தெரியவில்லை என்றும், சம்பவத்தன்று தான் அந்தக் கோயிலுக்குச் செல்லவே இல்லை என்றும் சுவாதி தடாலடியாக கூறினார். 'தன்னுடன் கல்லூரியில் படித்த மாணவன் என்ற அடிப்படையில் மட்டுமே கோகுல்ராஜை தெரியும். கல்லூரிக்குப் பின்னர் அவரை சந்திக்கவில்லை. சிசிடிவி கேமராவில் வரும் காட்சிகளை வைத்து கோகுல்ராஜை அடையாளம் காட்ட இயலாது,' என்றும் கூறினார்.


இதனால் கடும் அதிருப்தி அடைந்த சிபிசிஐடி போலீசார், பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 1, 2018) புதிதாக மனுத்தாக்கல் செய்தனர்.


அந்த மனுவில், ''அர்த்தநாரீஸ்வவரர் கோயிலில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராவில் கோகுல்ராஜும், சுவாதியும் 23.6.2015ம் தேதி பேசிக்கொண்டு இருந்தனர். அந்தக் காட்சிகளும், அவர்கள் இருவரையும் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேரும் மிரட்டுவதும், பின்னர் கோகுல்ராஜை மட்டும் தனியாக அந்த கும்பல் அழைத்துச் செல்வதும் பதிவாகி இருக்கிறது. 


வீடியோவில் பதிவாகி இருந்த காட்சிகள் தெளிவாக பார்க்கும் வண்ணம் இருக்கின்றன. ஆனாலும், அந்த வீடியோவில் பதிவாகி இருப்பது தன்னுடைய உருவம் இல்லை என்று சுவாதி மறுத்துவிட்டார். சம்பவத்தன்று மேற்படி கோயிலுக்கே செல்லவில்லை என்றும் சாட்சி விசாரணையின்போது சாட்சியம் அளித்திருக்கிறார். 


ஏற்கனவே ஜே.எம்.2 நீதிமன்றத்தில் சிஆர்பிசி பிரிவு 164ன் கீழ் அளித்த வாக்குமூலத்திற்கு முற்றிலும் முரணாக சாட்சியம் அளித்திருக்கிறார். இது சட்டப்படி குற்றம் ஆகும். பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 193ன் கீழ் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறப்பட்டு உள்ளது. 


சுவாதி மீதான இந்த மனு மீது தனி வழக்காக விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுவாதிக்கு ஓராண்டு முதல் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சிபிசிஐடி தரப்பில் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'இன்னும் நாங்கள் மூன்று பேர் மிச்சம் இருக்கிறோம்'- மனம் திறந்த இராபர்ட் பயஸ் 

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
 'There are still three of us left' - open-minded Robert Pius

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சாந்தன் உடலநலக் குறைவு காரணமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தனது தாயாரை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த சாந்தன் உயிரிழந்தது அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிறப்பு முகாமில் மருத்துவ வசதிகள் இல்லாததாலேயே அவர் உயிரிழந்தார் எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் 'சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாமில் இருந்து ஓர் திறந்த மடல்' என்ற தலைப்பில் தற்பொழுது திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இராபர்ட் பயஸ் கடிதம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

அந்த கடிதத்தில்

'உலகத் தமிழர்களுக்கு....

வணக்கம். நான் இராபர்ட் பயஸ் பேசுகிறேன். உங்களை உங்களோடு உங்களில் ஒருவனாக சுதந்திர மனிதனாக இல்லாமல் எங்களில் ஒருவரான சாந்தனை இழந்து இதோ இந்த கம்பிகளுக்கு பின்னால் இருந்து இப்படி உங்களை சந்திக்க நேர்ந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. 32 வருட நீண்ட சிறைக் கொட்டடிக்கு பிறகு கடந்த 11-11- 2022 அன்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்த ஆறுபேரில் நானும் ஒருவன். அந்த ஆறுபேரில் நான், ஜெயக்குமார், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய நால்வரையும் இலங்கைத் தமிழர் எனக் காரணம் கூறி இந்திய வெளியுறத்துறை நாட்டைவிட்டு வெளியே அனுப்பும் வரை சிறப்பு முகாமில் அடைத்து வைக்க உத்தரவிட்டது.

 'There are still three of us left' - open-minded Robert Pius

தொலைந்து போன வாழ்க்கையை எதிர்நோக்கி 32 வருட நீண்ட காத்திருப்பு முற்றுபெறும் தருவாயில் கூட விடுதலையை ருசிக்க முடியாமல், சிறிது நேரம் கூட விடுதலைக் காற்றை சுவாசிக்க முடியாமல் புழல் சிறையிலிருந்து நானும் ஜெயக்குமாரும் வேலூர் சிறையிலிருந்து சாந்தனும் முருகனும் திருச்சி சிறப்பு முகாமிற்கு கொண்டு வந்து அடைக்கப்பட்டோம். இதோ முடியப்போகுது 32 ஆண்டுக்கால சிறைக் காத்திருப்பு என்று எண்ணிய எங்களுக்கு அப்பொழுது விளங்கவில்லை நாங்கள் சிறை மாற்றப்படுகிறோம் என்று. ஆம், அன்று நடந்தேறியது அப்பட்டமான சிறை மாறுதல் தான் என்பதை எங்களுக்கு காலம் தான் விளக்கியது. இது சிறையல்ல சிறப்பு முகாம் தானே என்று எண்ணிய எங்களுக்கு இது சிறையல்ல சிறையை விட கொடுஞ்சிறை என்பதும் எங்களுக்கு போகப்போகத் தான் விளங்கியது.

நாட்டைவிட்டு அனுப்பும்வரை எங்களை சிறப்பு முகாமில் வைக்கிறோம் என்றவர்கள் இன்றைய தேதிவரை நாட்டைவிட்டு அனுப்புவதற்கு எடுத்த முன்னெடுப்புகள் என்னவென்று கேட்டால் மிகப்பெரிய கேள்விக்குறியும் ஆச்சரியக்குறியும் தான் மிஞ்சும். "சிறப்பு முகாமா..? அது ஜெயில் மாதிரிலாம் இல்லைங்க சார். எல்லா வசதிகளும் செய்து கொடுப்போம்" என்று பேசி சமாளிக்கும் அரசும் நிர்வாகமும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. கடந்த ஜனவரி 28 ஆம் தேதி ஒரு வார காலமாக மருந்து மாத்திரை கிடைக்காமல் ஒருவர் இறந்து போனார். இப்பொழுது சாந்தன் கல்லீரல் முழுவதும் செயலிழந்து, எழுந்து நிற்கக் கூட முடியாமல் மிக மோசமடைந்து பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் ஏதும் பலனளிக்காத நிலையில் இறந்து போயிருக்கிறார். இந்த மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது..? யாரை நாங்கள் நொந்துகொள்வது..?

அனைத்து அடிப்படை உரிமைகளையும் மறுத்து, உடல்நலன் குன்றி 'விடுதலை ஆகிவிடுவோம். விடுதலை ஆகிவிடுவோம்.' என்று கனவு கண்டு விடுதலை ஆகிவிட்டோம் என்று பூரிப்பு கிடைத்த தருவாயில் மீண்டும் ஏமாற்றப்பட்டு சிறைமாற்றப்பட்டு இதனால் மனநலனும் பாதிக்கப்பட்டு இறந்து போன சாந்தனுக்கு சிறை வாழ்வு முடிந்தது. இன்னும் மீதம் மூன்று பேர் இருக்கிறோம். நாங்கள் மீண்டும் காத்திருக்க தொடங்குகிறோம் இந்த சிறப்பு முகாமில்.

சிறையில் கூட சிறை நிர்வாகத்திற்கு சிறை விதிகள் கையேடு இருக்கிறது. அதன்படி கைதிகளுக்கு இருக்கக்கூடிய மற்றும் இல்லாத உரிமைகள் கடமைகள் வரையறுக்கப்பட்டு இருக்கும். ஆனால் சிறப்பு முகாமோ சிறையை விட கொடுமையானது, இங்கு எந்த சட்டத்திட்டங்களோ வரையறைகளோ கிடையாது. அரசும், மாவட்ட ஆட்சியரும், முகாம் நிர்வாகமும் என்ன நினைக்கிறதோ அவையெல்லாம் விதிமுறைகளாகவும் சட்டத்திட்டங்களாகவும் ஆக்குகின்றன. மருத்துவம் கிடையாது என்று இவர்கள் முடிவெடுத்தால் முகாம்வாசிகளுக்கு மருத்துவம் கிடையாது. தனிமைச் சிறை என்று இவர்கள் முடிவெடுத்தால் தனிமைச் சிறை, யாரும் மனு பார்க்கக்கூடாது என்று இவர்கள் முடிவெடுத்தால் யாரும் மனுப்பார்க்க முடியாது. இப்படியான நிர்வாகம் தான் நாட்டைவிட்டு வெளியில் அனுப்புவதற்காக என்று காரணம் கூறி சிறப்பு முகாமில் அடைக்கப்படுபவர்கள் அதற்கான எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படாமல் வருடக்கணக்கில் அப்படியே கிடப்பில் போடப்பட்டு இன்னொரு சிறைவாசத்தை அனுபவித்து வருகின்றனர். நாங்கள் சிறு சிறு அடிப்படைத் தேவைகளையும் மற்றும் அடிப்படை உரிமைகளையும் கூட போராடி, உயிரைக் கொடுத்து பெறவேண்டிய சூழலே இருக்கிறது.

எங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியான 32 வருடங்கள் ராஜீவ்காந்தி பெயரைச் சொல்லியே சிறையில் கடத்தப்பட்டது. இறுதியில் உச்சநீதிமன்றத்தின் விடுதலை ஆணைக்கு பின்னும் எங்களை எங்கள் குடும்பங்களோடு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்காமல் காலங்கடத்தி காலங்கடத்தி இறுதியில் சாந்தனை இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மீதமுள்ள நாங்களும் எங்களுக்கான ஒவ்வொரு அடிப்படை உரிமையையும் பெறுவதற்கு இதுவரை எண்ணற்ற மனுக்களையும், வழக்குகளையும், உண்ணாநிலை போராட்டங்களையும் மேற்கொண்டே பெற்று வருகின்றோம். அதில் பெரும்பான்மையான வாக்குறுதிகள் காற்றிலே போகும். மீதி, கேட்கப்படாமலே மக்கிப் போகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், இந்த மாத தொடக்கத்தில் இலங்கை துணைத் தூதரகம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நானும் முருகனும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட பொழுது ஒரு வாரத்தில் அழைத்துச் செல்கிறோம் என்று எங்களுக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டு 20 நாட்களை கடந்தும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இவ்வாறில்லாமல் உரிய அரசு நெறிமுறைகள், அவர்கள் கடமையை முறையே செய்திருந்தால் இன்று சாந்தன் உயிருடன் அவருடைய தாயாருடனும் குடும்பத்தினருடனும் மகிழ்ச்சியாக இன்னும் ஓரிரு வருடங்களாவது இருந்திருப்பார்.

33 வருடங்களாக தனது மகனை பிரிந்து கண்பார்வை குன்றி வயது முதிர்ச்சியடைந்து கடைசியாக ஒருமுறையாவது தனது மகனை பார்த்துவிடவேண்டும் என்று ஏங்கிய ஒரு தாயின் கையில் அந்த மகனின் உயிரற்ற உடலைத்தான் கொண்டுபோய் சேர்க்கப் போகிறோம். கடைசியாக தனது கையால் தன்மகனுக்கு ஒருபிடி உணவு கொடுக்க மாட்டோமா என்று ஏங்கிய அந்த தாய் அந்தமகனுக்கு கடைசியாகக் வாய்க்கரிசி கொடுக்கத்தான் வாய்க்கப்பட்டிருக்கிறார். இதோ இன்று தன் மகன் வந்துவிடுவான், என்று எதிர்பார்த்து காத்திருந்த அந்தத் தாயிடம் 'உன் மகன் வரவில்லை. அவனின் உயிரற்ற உடல்தான் வருகிறது' என்கிற செய்தியை அந்தத் தாயிடம் யாரால் சொல்லியிருக்க முடியும். அத்தகைய கல்நெஞ்சம் படைத்த மனிதர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்களா என்ன.!? 33 வருடங்கள் கழித்து தன் மகனின் வருகைக்காக மகிழ்ச்சியாக காத்திருந்திருக்கும் அந்த வீட்டில் இந்த செய்தி ஏற்படுத்திய மயான அமைதியின் பேரிரைச்சலை தாங்கிக் கொள்ளும் கனத்த இதயம் கொண்ட மனிதர்களும் இவ்வுலகில் இருக்கிறார்களா என்ன?!

இதோ கடந்த மாதம் என்னுடன் நடந்து மருத்துவ பரிசோதனைக்கு வந்த சாந்தன் இன்று எங்களோடு இல்லை. ஒரு மாதத்தில், எங்களோடு உறவாடி, பேசி உலாவிய சாந்தன் இன்று உயிரோடு இல்லை.

மீதமிருக்கிற, ஜெயக்குமாரும் முருகனும் 33 வருடங்களாக தங்கள் குடும்பங்களை பிரிந்து வாடும் நிலையில் நானோ, மனைவி ஒரு நாட்டில் மகன் ஒரு நாட்டில் தாய், சகோதர சகோதரிகள் வேறு நாட்டில் என சிதறுண்டுக் சிதைந்துக் கிடக்கும் குடும்பத்தை ஒன்றுசேர்த்து ஒரு நாளேனும் வாழ்ந்து விட மாட்டோமா?! பச்சிளம் பாலகனாக பார்த்த எனது மகன் எவ்வளவு உயரம் இருப்பான்? அவன் என்னைவிட உயரமா? அல்ல உயரம் குறைவா? அவனுக்கு திருமணம் ஆகி எனக்கு பேரன் பிறந்திருக்கிறானாம்.! நான் எந்த வயதில் என் மகனை பிரிந்தேனோ அந்த வயதில் எனக்கு இப்பொழுது பேரன் இருக்கிறான். அவனதுப் பஞ்சு பாதங்களை அள்ளியெடுத்து ஒருமுறையேனும் என் முத்தங்களை காணிக்கையாக்கிவிட மாட்டேனா..?!

அன்பார்ந்த உலகத் தமிழ் சமூகமே இன்னும் நாங்கள் மூன்று பேர் மிச்சம் இருக்கிறோம். எங்கள் நிலைமை? நீண்டகால சிறைவாசமும், குடும்பங்களை பிரிந்த துயரமும் எங்களை முழுமையான நோயாளிகளாக்கியுள்ளது. சாந்தனைப் போலல்லாமல் எங்களையாவது எங்கள் கடைசி காலத்தில் மிஞ்சியிருக்கிற கொஞ்ச காலம் எங்கள் தாயார், மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகளுடன் வாழ்ந்து விட்டுப் போக இந்த அரசு இனியாவது நடவடிக்கை எடுக்குமா..?

எங்கள் குடும்பங்களை பிரிந்து வாழ்க்கையை இழந்து வாடும் இப்பெருந்துன்பங்கள் முடிவுக்கு வருமா..?' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.