Skip to main content

ஆடு திருடனை பொதுமக்களே பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைப்பு!

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

Goat thief caught by the public and handed over to the police!

 

புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் கடந்த சில வருடங்களாக ஆடுகள் திருட்டு அதிகரித்துவருகிறது. சில வருடங்களுக்கு முன்பு, கிடைகளில் நிற்கும் ஆடுகளை மொத்தமாக திருடிச் சென்ற காலம் மாறி, வீட்டுக்கு வீடு ஒவ்வொரு ஆடாக திருடுவது அதிகரித்துள்ளது. நள்ளிரவுக்குப் பிறகு ஊர் அமைதியான பிறகு மோட்டார் சைக்கிள், ஆம்னி கார், டாடா ஏசிஇ போன்ற வாகனங்களில் வரும் திருடர்கள், ஆடுகளைத் தூக்கிக்கொண்டு சென்றுவிடுகின்றனர்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், மேற்பனைக்காடு, வடகாடு, மாங்காடு, புள்ளாண்விடுதி உள்பட பல கிராமங்களிலும் தஞ்சை மாவட்டம், பேராவூரணி பகுதியில் மணக்காடு, சித்தாதிக்காடு உள்பட பல கிராமங்களிலும் சில மாதங்களில் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடப்பட்ட நிலையில், கீரமங்கலத்தில் இரு ஆடு திருடர்களோடு 2 ஆடுகள், 2 மோட்டார் சைக்கிள்களையும் பிடித்துக்கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. 

 

அதேபோல கடந்த வாரம் பேராவூரணி அருகே சித்தாதிக்காட்டில் இரு ஆடு திருடர்களைப் பிடித்துக்கொடுத்தனர். அதன் பிறகும் திருட்டுகள் குறையவில்லை. இவர்களின் நெட்ஒர்க் பற்றி சொல்லியும் கூட காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை. ஆனால் பிடிபட்ட இடத்தில் மேலும் சிலர் தங்கள் கும்பலில் இருப்பதாகவும் கூகுள் மேப் வைத்து தப்பிச் செல்வோம் என்று கூறியுள்ளனர். அந்த மேலும் சிலர் பற்றி புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் தகவல் பெற்றும் கூட விசாரணை செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இந்த நிலையில்தான், திருவோணம் அருகே சிவவிடுதி கிராமத்தில் நள்ளிரவில் ஆடு திருடவந்த ஒரு கும்பலை பொதுமக்களே விரட்டிப் பிடிக்க முயன்றபோது பேராவூரணியைச் சேர்ந்த வீரமணி என்ற இளைஞர் மட்டும் சிக்கியுள்ளார். இவர் மீது ஏற்கனவே ஆடுகள் திருட்டு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து ஆடுகளைப் பறிகொடுத்த கிராம மக்கள் பிடிபட்ட திருடனை மரத்தில் கட்டிவைத்து விசாரித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பொதுமக்கள் பிடித்துக்கொடுத்த இந்த திருடன் மூலமாக தப்பிச் சென்ற மற்ற திருடர்களைப் பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தால் ஆடுகளைப் பறிகொடுத்த விவசாயிகள் நிம்மதியாக இருப்பார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.