Skip to main content

கந்து வட்டி கேட்டு மிரட்டல்; கணவன், மனைவி கைது!

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

money incident husband and wife police arrested

 

மத்தூர் அருகே, 1.10 லட்சம் ரூபாய் கடனுக்கு அசல், வட்டி என 5.25 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய கணவன், மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள போடிபதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி அம்பிகா. இவர்கள் கடந்த 2018- ஆம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பவரிடம் வட்டிக்கு 1.10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். 

 

கடனுக்கு உரிய வட்டித்தொகை செலுத்தி வந்துள்ளனர். கடந்த ஜூன் 20- ஆம் தேதி இளவரசனும், அவருடைய மனைவி சித்ராவும் திடீரென்று கிருஷ்ணனின் வீட்டுக்கு வந்து அசல் கடன் மற்றும் வட்டி சேர்த்து இன்னும் 5.25 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர். 

 

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து கிருஷ்ணன், மத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இளவரசன், சித்ரா மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். 

 

இருவரையும் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில், இளவரசனை கிருஷ்ணகிரி கிளைச்சிறையிலும், சித்ராவை சேலம் பெண்கள் சிறையிலும் அடைத்தனர். 
 

 

சார்ந்த செய்திகள்