Skip to main content

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் பிறந்த தினமும் முதல்வரின் புதிய அறிவிப்பும்! 

Published on 25/06/2023 | Edited on 25/06/2023

 

 

former prime minister vp singh birthday cm mk staliin new announcement

முன்னாள் பிரதமரும் சமூக நீதிக் காவலருமான வி.பி. சிங் பிறந்தநாள் இன்று. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அறிஞர்களும் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

 

அந்த வகையில் வி.பி. சிங் பிறந்தநாள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில், “முன்னாள் பிரதமர் திரு.வி.பி. சிங் அவர்களது பிறந்தநாளில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்றுவதில் உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்த அப்புரட்சியாளர்க்கு என் புகழஞ்சலியைச் செலுத்துகிறேன். சமூகநீதிக்கான பணியை அச்சமின்றி முன்னெடுத்து, அனைவரையும் “இட ஒதுக்கீடு எங்கள் உரிமை" என ஓங்கி முழங்கச் செய்தவர் அவர்.

 

வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு அதிகாரமளிக்கும் இலக்கில் திரு. வி.பி. சிங் அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டவர்கள் ஆவர். திரு. வி.பி. சிங் அவர்களது சிந்தனைகள் மேலும் ஒளிமயமான, சமத்துவமான எதிர்காலத்தை நோக்கி நம்மைத் தொடர்ந்து வழி நடத்தட்டும்.” எனத் தெரிவித்திருந்தார். மேலும் கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது ஏப்ரல் 20 ஆம் தேதி அன்று  சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிவிப்பில், “உத்திரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் அந்நாளில் பெரும் ஜமீன்தாராக இருந்த ராஜா தயா பகவதி பிரதாப் சிங் அவர்களுக்கு மகனாக பிறந்த விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்கள், செல்வ சூழ்நிலையில் வளர்ந்தாலும் அதில் மனம் ஒட்டாமல் சட்டக் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டவர். சர்வோதய சமாஜில் இணைந்து பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து தனது நிலங்களையே தானமாக வழங்கியவர். பின்னாளில் உத்திரப் பிரதேச மாநில முதலமைச்சராகவும், மத்திய வர்த்தக அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தவர். பின்னர் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ஆனார்.

 

அவர் பிரதமராக இருந்தது பதினோரு மாதங்கள் தான் என்றாலும், அதற்குள் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின, பழங்குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இட ஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக B.P. மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை அமல்படுத்திய சமூகக் காவலர் திரு. வி.பி. சிங்.

former prime minister vp singh birthday cm mk staliin new announcement

தமிழ்நாட்டைத் தனது இரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக நினைத்த வி.பி. சிங் தந்தை பெரியாரைத் தனது உயிரினும் மேலான தலைவராக ஏற்றுக் கொண்டார். ஒரு மனிதனுக்கு சாவை விட மிகக் கொடுமையானது “அவமானம்". இந்த அவமானத்தை துடைக்கும் மருந்துதான் பெரியாரின் "சுயமரியாதை” என்று சொன்னவர்  வி.பி. சிங். முத்தமிழறிஞர் கலைஞரை தனது சொந்த சகோதரர் போல் மதித்தவர். தனது ஆட்சியைப் பற்றிக்கூடப் பொருட்படுத்தாமல், ஒரு கொள்கைக்காக, இலட்சியத்துக்காக என்னோடு இருந்த மாபெரும் தலைவர் கலைஞர் என்று பாராட்டியவர் வி.பி.சிங். அத்தகைய சமூக நீதிக் காவலருக்கு அவருடைய பிறந்தநாளான இன்று, ஏற்கனவே 20.4.2023 அன்று சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்த அறிவிப்பிற்கு இணங்க, சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர் பெருமக்கள் ஆகியோரது வேண்டுகோளை ஏற்று அரசு அதனை பரிசீலித்து "சமூக நீதிக் காவலர்" வி.பி. சிங் அவர்களுக்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முழு உருவக் கம்பீரச் சிலை அமைத்திட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்