
தென்னிந்தியாவின் மற்றும் தமிழகத்தின் முதல் பா.ஜ.க. எம்எல்ஏவும், கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான சி.வேலாயுதம் நேற்று (08.05.2024) காலமானார். இந்நிலையில் வேலாயுதம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பத்மநாபபுரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதம் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். மாற்றுக் கொள்கைகள் கொண்டவராக இருந்தாலும், கட்சி வேறுபாடுகளின்றி அனைவரிடமும் பழகும் குணம் கொண்டவர் பழகுதற்கினிய உள்ளம் கொண்டவர் அவர். கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற பாசம் கொண்டு பழகியவர். அவரது இல்ல நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்று வாழ்த்திய நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள். நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக வேலாயுதம் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் மத்தியஉள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.