Skip to main content

நான்காம் நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்; உறுதியளித்த நாகை ஆட்சியர்

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

The fishermen's struggle continues for the fourth day; Nagai Collector assured

 

நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்தின் பைப்லைன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென உடைந்து, நாகூர் முதல் வேளாங்கண்ணி வரையிலான கடல்நீர் முழுவதும் பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் படர்ந்துள்ளது. கடலில் படர்ந்துள்ள கச்சா எண்ணெய்யின் வீரியத்தால் கடலோரத்தில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்களுக்கு கண் எரிச்சல், சுவாசக் கோளாறு ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

நேற்று முன்தினம் காலை மீனவர்கள் வந்து கடற்கரையில் பார்த்தபொழுது அங்கு பைப்லைனில் இருந்து மீண்டும் கச்சா எண்ணெய் கசிந்து கொண்டிருந்தது. இதனால் ஆவேசமடைந்த நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் பைப்லைனை முற்றிலும் அகற்ற வேண்டும் என  இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். மீனவர்களின் போராட்டம் காரணமாக அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வேலைநிறுத்தப் போராட்டமானது நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது.

 

நேற்று உடைப்பு ஏற்பட்ட குழாயை அடைக்கும் பணி நிறைவு பெற்றதாக சிபிசிஎல் நிறுவனம் தெரிவித்திருந்தது. குழாயின் பணிக்காலம் இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளதால் அதன் பிறகே அதனை முழுமையாக அகற்ற முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், நேற்று மாலை மீண்டும் அதே குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதால் பழுதை சரி செய்யும் பணியில் அந்நிறுவன ஊழியர்கள் மீண்டும் ஈடுபட்டனர். சீரமைப்பிற்கு பிறகும் கச்சா எண்ணெய் கசிவு அங்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

 

தொடர்ந்து கடல் பகுதியில் செல்லும் குழாய்களை அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்படும் இடத்தில் ஆய்வு செய்த நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், போராட்டம் நடத்தி வரும் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதோடு மறு உத்தரவு வரும்வரை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி சிபிசிஎல் நிறுவனத்தின் குழாயில் கச்சா எண்ணெய் செலுத்தப்படமாட்டாது என மீனவர்களுக்கு உறுதியளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்