Skip to main content

தாய் தந்தையிடையே சண்டை; தந்தை செய்த செயலால் மகன் தற்கொலை!!

Published on 19/06/2021 | Edited on 19/06/2021
Fight between mother and father; Son commits suicide by father

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது புகைப்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 43 வயது கூலி தொழிலாளி சீனிவாசன். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் வேலைக்குச் சென்ற சீனிவாசன் உழைத்து சம்பாதித்த பணத்தில் குடித்துவிட்டு வெறுங்கையோடு இரவு வீட்டுக்கு வந்துள்ளார். இதைக் கண்ட அவரது மனைவி பூமாதேவி கணவரிடம் தினசரி வேலைக்குச் சென்று சம்பாதிக்கின்ற பணத்தில் இப்படி குடித்துவிட்டு வந்தால் நாம் நமது குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது, பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்று சண்டை போட்டுள்ளார்.

 

இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த அவரது மகன் குபேந்திரன் தாய் தந்தை இருவருக்கும் இடையே நடந்த சண்டையை தடுக்க முயன்றார். அவர் தடுப்பதையும் மீறி அவரது தந்தை சீனிவாசன் தாயாரிடம் ரகளையில் ஈடுபட்டதால் கோபமுற்ற குபேந்திரன் தந்தை சீனிவாசன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மகன் தன்னை கன்னத்தில் அறைந்ததும் சீனிவாசனின் போதை கலைந்து சுயநினைவு அடைந்தார். பலர் பார்க்க தான் பெற்ற மகன் தன் கன்னத்தில் அறைந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதை அவமானமாகக் கருதினார். இதனால் மனம் வெறுத்துப் போன சீனிவாசன் மீண்டும் மதுக் கடைக்குச் சென்று மது வாங்கி வந்து அதில் விஷத்தைக் கலந்து குடித்துள்ளார்.

 

இதனால் மயங்கி விழுந்த சீனிவாசனை அக்கம்பக்த்தினர் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சீனிவாசன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தந்தையை தாம் அறைந்ததால்  தானே அதை அவமானமாகக் கருதி தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பதை அறிந்த அவரது மகன் குபேந்திரன் மிகவும் வேதனைப்பட்டார். தனது தந்தை உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு நாம் தானே பொறுப்பு ஊர் நம்மை பலவாறு பேசுமே என்று மனம் நொந்து போன குபேந்திரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இதைக் கண்ட அவரது உறவினர்கள் குபேந்திரன் உடலை எடுத்துச் சென்று தீ வைத்து எரித்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த எல வாசனூர் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட குபேந்திரன் உடலை எங்களுக்குத் தெரியாமல் ஏன் எரித்தீர்கள் என்று கேட்டுள்ளனர். இதனால் கிராம மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு போலீசார் அங்கிருந்து சென்றுள்ளனர். தந்தை மகனுக்கு ஏற்பட்ட சண்டையில் தந்தை தற்கொலைக்கு முயற்சிக்க அதற்கு நாம் காரணமாகி விட்டோமோ என்று மனம் நொந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புகைப்பட்டி கிராம மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்பதாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.