
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால்(50). விவசாயியான இவரும் அதே பகுதியில் உள்ள காங்கேயனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏழுமலை இருவரும் ஏற்கனவே அறிமுகமான நண்பர்கள். இந்த நட்பு மூலம் கோபால் மகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார் ஏழுமலை.
அவரை நம்பி மகளுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார் கோபால். ஆனால், ஏழுமலை கூறியபடி கோபால் மகளுக்கு வேலை வாங்கித் தரவில்லை; பணத்தையும் திருப்பித் தரவில்லை. அதையடுத்து கோபால், ஏழுமலையிடம் மகளுக்கு வேலை வாங்கித் தராவிட்டாலும் பரவாயில்லை. தான் கொடுத்த பணம் இரண்டு லட்சத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
இது சம்பந்தமாக கடந்த 23ஆம் தேதி காலை 11 மணி அளவில் கோபால் அவரது மனைவி விசாலாட்சி, மகன் சிவா ஆகிய மூவரும் காங்கேயனூரில் உள்ள ஏழுமலை வீட்டுக்குச் சென்று பணம் கேட்டுள்ளனர். இதில், ஏழுமலைக்கும் கோபால் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபால் அவரது மனைவி மகன் ஆகிய மூவரும் ஏழுமலையை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ஏழுமலை மயங்கி விழுந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை, சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். நேற்றுமுன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி ஏழுமலை உயிரிழந்துள்ளார். அதனையடுத்து ஏழுமலையின் மனைவி மகாலட்சுமி மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.