ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் பாலக்காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி சசிகலா தேவி. இவர்களுக்கு கனிஷ்கா என்ற கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வரும் மகள் உள்ளார். சுரேஷ்குமார் விவசாயம் செய்து வரும் நிலையில், நேற்று ஈரோட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் மொடக்குறிச்சி செல்லும் சாலையில் சின்னியம்பாளையம் நோக்கிச் சென்றுள்ளார். அப்போது மொடக்குறிச்சியில் இருந்து ஈரோடு நோக்கி அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் சுரேஷ்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மொடக்குறிச்சி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், காரில் வந்தது பல்வேறு ஊர்களிலிருந்து கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் என்பதும், நண்பர்களுடன் காரை எடுத்துக்கொண்டு கொடுமுடி பகுதிக்கு வந்ததும், காரை நந்தகுமார் என்ற மாணவர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக மொடக்குறிச்சி காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.